Skip to main content

ஓசை....!



சற்று முன் மழை பெய்து நின்று போன ஒரு பின் மாலை வேளை அது. மழைக்காக ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்ற நான் பாதி நனைந்தும் நனையாமலும் என் கிராமத்துக்கான பேருந்து செல்லா ஒற்றையடிப்பாதையில் மெல்ல நடக்கிறேன்.

மரங்கள் எல்லாம் மழை வாங்கிய சந்தோசத்தைத் தன் இலைகளில் தேக்கிவைத்து என்னைக் கொஞ்சம் உலுக்கேன்; நான் ஒரு மழை பெய்கிறேன் என்று கொக்கி போட்டு இழுத்தன என்னை... சேறும் சகதியுமான என் ஊருக்கான வழி 50 வருடங்களாய் இப்படித்தான் இருப்பதாக ஊர் பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.....

மழை நின்று விட்டது. வெளியே போவோமா அல்லது வேண்டாமா என்ற சர்ச்சையில் மரங்களில் இருந்த காக்கைகளும் குருவிகளும் கிளிகளும் கூச்சலிட்டு விவாதித்துக் கொண்டிருந்ததற்குக் காரணம் இருட்டத் தொடங்கியிருந்ததுதான் என்பது எனக்கும் அவற்றுக்கும் நன்றாகவே தெரியும். புற்கள் எல்லாம் புதுமணப்பெண்ணாக மழைத்துளியை வாங்கிச் சிலிர்த்து வெட்கத்தோடு ஏதேதோ கதைகள் சொல்லிக் கொண்டிருந்தன....

மண்ணின் வாசம் எல்லாவற்றையும் தாண்டி என்னுள் அடாவடியாய் உள் நுழைந்ததோடு சுற்றியிருந்த தாவரங்களின் பச்சைப் பசுமையின் வாசமும் ஒரு மாதிரி உள் சென்று கிலேசத்தைக் கொடுத்த அந்த நொடியில் மூர்ச்சையாவதற்குச் சமமாய் ஒரு மனோ நிலையில் நான் கிடந்த போது அந்த சில் வண்டின் சப்தத்தை மூளை கவனிக்கத் தொடங்கியிருந்தது.....சுகமாய் எங்கிருந்தோ ஒரு அதிர்வினை பரப்பும் சில்வண்டுகள் மோன நிலையிலேயே இருக்குமோ என்று கூட நினைத்தது உண்டு.....

ஊதக்காற்று என் உடை தாண்டி உடல் சென்று உள் எலும்புகளை நொறுக்கிப் போட்டுக் கொண்டே இருந்தது நானும் அதைக் காதலோடு உள்வாங்கி அசை போட்டுக் கொண்டே நடந்தேன்.......

ஊருக்கு வருகிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை திடீரென்று முடிவு செய்து தடாலென்று வந்து கொண்டிருக்கிறேன். நான் கிளம்பும் போதே அம்மா அப்பாவிடம் வேறு எங்கோ போகிறேன் என்று சொல்லிவிட்டு என் சொந்த கிராமத்திற்கு அதுவும் யாருமில்லாமல் பூட்டிக்கிடக்கும் என் பூர்வீக வீட்டிற்கு....இதோ மழையோடு, காற்றோடு, சேறோடு, சகதியோடு, பறவைகளின் பேச்சோடு... மருது சீமையின் மண்ணில் கருவை மரங்களின் உரசலோடு .... நடந்து கொன்டிருக்கிறேன்...! ஒரு விசயம் நான் செருப்பைக் கழட்டிப் பையில் வைத்து வெகு நேரம் ஆகிவிட்டது என்பதை உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும்...

ஆனால் இன்னும் நான் எதிர்பார்த்தது போல ஒருமுறை கூட என்னை முத்தமிடாமல் ஒதுங்கிக்கிடந்தன முட்கள்...இப்போதோ அப்போதோ எப்போதோ குத்தும் ஏதாவது ஒரு முள் என் பாதங்களில் அப்போதுதான் நான் அந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் என்பதை என்னால் அனுபவிக்க முடியும்

அதுவும் முள் குத்தும் அந்த ஒரு நிமிடம் சுரீரென்று ஒரு வலி பாதத்தில் இருந்து பரவி உடல் முழுதும் தாக்கி ஒரு வித வேதனை என்று மனம் அதை நம்ப வைக்கும். அந்த நொடியில் நாம் அனிச்சையாய் நிதானிக்க வேண்டும். ஆமாம் வலி என்பது அப்போது மாறி ஒரு சுகானுபவம் வாய்க்கும் நமது உற்று நோக்கலில்.....அதுவும் குத்திய முள்ளை மெல்ல உடல் விட்டு அகற்றும் அந்த நொடியில் குபுக்கென்று பொட்டு ரத்தம் வெளியே வந்து சொந்த மண்ணை எட்டிப்பார்க்கும் அதே வேகத்தில் தரையில் கால் வைத்து தேய்த்து மண்ணோடு இரத்தம் சேர்த்து அழுந்த வலியை உள்வாங்கிக் கொள்ளும் சுகம்.....என்னவென்று அப்படி செய்தவர்களுக்கும் எனக்கும் தெரியும்.......


200 வீடுகள் கொண்ட ஒரு உலகத்திற்குள் நுழையும் முன்பே அப்பத்தா தாத்தாவின் நினைவுகள் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டன.... ஆமாம் இப்போதான் வீட்டுக்கு சிமிண்ட் பூசினோம்(1993) அதுக்கு முன்னால் சாணம் மொழுகி மொழுகி அப்படித்தான் இருக்கும் வீடு...சாணம் மொழுகிய பின் ஒரு வாசம் வீடு முழுதும் இருக்கும். மண் தரையும் மண்பானை பாத்திரங்களும் மிகுந்த ஒரு வீட்டில் ஒரு கலாச்சார வாசம் அடித்துக் கொண்டே இருக்கும்....

மின்சாரம் இல்லாத நாட்களில் நிறையவே உயிரோட்டமான வாழ்க்கை இருந்திருப்பதாக நான் நினைக்கிறேன். அரிக்கேன் விளக்கும் காண்டா விளக்கும் வீடு முழுதும் பரவியிருக்க அடுப்பில் சுள்ளிகள் (முள்ளு விறகு) வச்சி அப்பத்தா சமைக்கிற அழகும் அதுவும் அந்த ஊதாங்குழல் வச்சு ஊதி ஊதிக் கங்குகளைப் (நெருப்புத்துண்டு) பற்றவைக்கும் அழகும் அந்த நெருப்பு வெளிச்சத்தில் மின்னும் அவளது தண்டட்டியின் பளபளப்பும்....

ஆத்தாடி.....சொல்லவே முடியாத ஒரு குறுகுறுப்பு இப்பவும் நெஞ்சுக்குள்ள இருக்கத்தான் செய்யுது...! வாழ்க்கையை நிறையவே தொலைத்திருக்கிறொம் என்பது மெலிதாக உணர முடிந்தது. அறிவியல் வளர்ச்சியும் நவீனமும் மனிதத்தைப் பொசுக்கி இருக்கின்றன....

கல்லாங்காய் ஆட்டமெங்கே? கிளிக் கோடு எங்கே? சில்லுக் கோடு எங்கே? கிட்டிப்புல் எங்கே? ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டு எங்கே? கல்லா மண்ணா எங்கே? திருடன் போலிஸ் விளையாட்டு எங்கே? கண்ணாமூச்சி ரே ரே காதடைப்பார் ரே ரே எங்கே எங்கே? ஈர்க்குச்சி விளையாட்டு எங்கே? சைக்கிள் பழகும் சிறுவர்கள் எங்கே? கதை சொல்லும் அக்காக்களும் அம்மாக்களும் எங்கே? மழை எங்கே? மழையின் பொரி அரிசி எங்கே? அவிச்ச கடலை எங்கே..................

எங்கே என் வாழ்க்கை? எங்கே என் கூட்டம்? எங்கே என் மனிதர்கள்? மனிதனின் முகம் காணா எந்திரங்களோடு தொடர்பு கொண்டு திருப்தியடையும் மூளைக்காட்சிகள் என்னும் மைண்ட் இலூசனில் வாழும் கற்பனை வாழ்க்கையாய்ப் போய்விட்டதே....எமது வாழ்வும் விழாக்களும் சந்தோசங்களும்.....

நேரே பார்க்கும் நண்பனைச் சாட்டுக்கு வாடா பேசலாம் என்று சொல்லும் ஒரு பாழாய்ப்போன பித்து மனோ நிலைக்கு வந்துவிட்டதே எம் உலகம்......!

நான் யோசனைகளோடு நடந்து கொண்டிருந்தேன்....ஊர் எல்லையில் ' ஏப்பு நடந்தா வாரீக... மழைத்தண்ணியாவுல இருக்கு ? ஒத்தையில் வாரீகளே அய்யாவும் ஆத்தாவும் வரலயா? வார்த்தைகளில் பாசம் தடவினார் ஒத்த வீட்டுக் கண்ணப்பன் அண்ணன்...

'இல்லண்னே சும்மாத்தேன் வந்தேன்' மறுமொழியோடு அவரது வீடு கடக்கையில் ஆடுகளின் வாசமும் அவற்றின் இரைச்சலும் தாண்டி அவரது மாடு சப்தமிட்டு என்னை வேகமாய் வரவேற்றது....

ஆசையோடு ஒரு கருவை முள் என் சட்டை பிடித்து இழுத்து 'ஏஞ்சே எப்பஞ்சே வந்த'ன்னு ஒரு பாசத்தைக் காற்றாக மாற்றி என்னைத் தடவியது.....

இதோ என் பூர்வீக வீடு....பூட்டுக்களையும் சில நூற்றாண்டு வாழ்க்கையையும் தாங்கியபடி.....

எதிர்வீட்டு அத்தை அப்பாவின் அக்கா... அப்பு என்ன ஒத்தையில் வந்துருக்கீகா..னு கண்டாங்கிச் சீலை தடுக்க கீழே விழுந்து விடுவது போல ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டு இரத்த பாசத்தை முத்தமாகக் கொடுத்து ....குடும்ப விசயங்களைப் பேசிவிட்டு .. காபி எடுக்க அவர் வீட்டுகுள் நுழைய....

நான் அப்பாவிற்குத் தெரியாமல் கொண்டு வந்திருந்த வீட்டின் சாவியைப் பூட்டுகுள் கொடுத்து முடுக்க...பூட்டு சந்தோசமாய் விலகி என்னைப் பார்த்துச் சிரித்தது.....

நிசப்தமாய் வீட்டுக்குள் நுழைந்தேன்.....!

வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் மறந்து போன அழகான ஓசைகள் ஆயிரம் இருக்கும்...! என் மெளனங்கள் எல்லாம் இப்படிப்பட்ட ரம்யமான ஓசைகளால் தான் நிரம்பியிருக்கிறது....



அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா!


தேவா . S


Comments

மழையில்லாமலே மண்வாசம்!

ஓசையைப் படித்து....சாரி, கேட்டு.....சாரி, உணர்ந்து ரசித்தேன். மனதின் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கிடந்த உணர்வுகள் வெளியே எட்டிப் பார்த்தன. சிறிது நேரம் எனது கற்பனையிலேயே என் ஊருக்குப் போய் வந்தேன்.

சரி, படத்தை எங்க இருந்து, எப்படி செலக்ட் பண்றீங்க தேவா? Awesome.
நடுராத்திரில நாய் ஊளையிடும் சத்தத்தை பேயின் அழுகை சத்தத்தை கேட்டிருக்கீங்களா?
// ஒரு விசயம் நான் செருப்பைக் கழட்டிப் பையில் வைத்து வெகு நேரம் ஆகிவிட்டது என்பதை உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும்...
/

தமிழ்படம்ல சிலிர்ப்பு வர்ற மாதிரி இருக்கானு பார்ப்பாங்களே .,
அந்த மாதிரி டெஸ்டிங்..?
////வீடு முழுதும் பரவியிருக்க அடுப்பில் சுள்ளிகள் (முள்ளு விறகு) வச்சி அப்பத்தா சமைக்கிற அழகும் அதுவும் அந்த ஊதாங்குழல் வச்சு ஊதி ஊதிக் கங்குகளைப் (நெருப்புத்துண்டு) பற்றவைக்கும் அழகும் அந்த நெருப்பு வெளிச்சத்தில் மின்னும் அவளது தண்டட்டியின் பளபளப்பும்....////

இப்போ பார்ப்பதற்கு அதாவது நினைவுகளுக்கு அது அழகாக இருக்கலாம் .. ஆனால் உண்மையில் அதனை அனுபவிக்கும் போது அதாவது அவர்கள் சமைப்பதைப் பார்க்கும் பொழுது இவ்வளவு தூரம் நம்மால் ரசித்திருக்க முடியாது .. அந்த முள்ளு , மண்ணு மேட்டர் கூட அப்படித்தான் .!
Balaji.D.R said…
பம்பரம், பலிங்கி, தாயக்கட்டை, பல்லாங்குழி, எலந்தபழம், எலந்தவடை, எலந்த ஜாம், கிணற்றில் சேமித்து வைத்த இளநீர், பாறை வண்டிப் பயணம் இன்னும் பல.

நம் குழந்தைகளும், அவர்களுக்குப் பின் வரும் சந்ததியனருக்கும், நாம் நிறைய இழப்பை தேடித் தந்திருக்கிறோம். இதற்கு நாம் கட்டும் சப்பைகட்டு, வாழ்க்கை முன்னேற்றம், விஞ்ஞான முன்னேற்றம். வெட்கம். பழைமையை கப்பாற்றாத முன்னேற்றம் ஒரு முன்னேற்றமா?
//கல்லாங்காய் ஆட்டமெங்கே? கிளிக் கோடு எங்கே? சில்லுக் கோடு எங்கே? கிட்டிப்புல் எங்கே? ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டு எங்கே? கல்லா மண்ணா எங்கே? திருடன் போலிஸ் விளையாட்டு எங்கே? கண்ணாமூச்சி ரே ரே காதடைப்பார் ரே ரே எங்கே எங்கே? ஈர்க்குச்சி விளையாட்டு எங்கே? சைக்கிள் பழகும் சிறுவர்கள் எங்கே? கதை சொல்லும் அக்காக்களும் அம்மாக்களும் எங்கே? மழை எங்கே? மழையின் பொரி அரிசி எங்கே? அவிச்ச கடலை எங்கே..................//


அண்ணா... நானும் சிவகெங்கை சீமையில் சிறிய கிராமத்துக்காரன் என்பதால் உங்கள் மனசின் வலி, நம்ம பக்கத்து பேச்சு வழக்காக வந்ததால் எனக்குள்ளும் பரவியது.... நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம்.... குறிப்பாக பாசங்காட்டும் உறவுகளை சுத்தமாக இழந்துவிட்டோம்... இனி வரும் சந்ததிகளுக்கு கிராமத்தின் வாசம் சுத்தமாக இல்லாமல் போய் விடும். அதற்கு நாமும் காரணமாகிவிட்டோம் என்பதே வருத்தமான விஷயம்.
// அதே வேகத்தில் தரையில் கால் வைத்து தேய்த்து மண்ணோடு இரத்தம் சேர்த்து அழுந்த வலியை உள்வாங்கிக் கொள்ளும் சுகம்.....என்னவென்று அப்படி செய்தவர்களுக்கும் எனக்கும் தெரியும்....... //

உங்களின் வரிகள் அவை தாங்கும் உணர்வுகள் அருமை.
எல்லோர் வாழ்விலும் இது போன்ற கரைந்து போன சுகமான அனுபவங்கள்,மனமுழுவதிலும் வியாபித்து இருக்கவே செய்கின்றன.

என்னை மூத்தவராக தாங்கள் இருந்தாலும்,தங்களின் எண்ண ஓட்டத்தில் வரும் காட்சிகள் என் பிள்ளைப்பருவத்துடன் ஒத்துத்தான் போகிறது.

அத்துனையும் சுவாரஸ்யமாய் அசைபோட,நேரம் கிடைப்பதும் இல்லை.அதை அனுபவமாய் பகிர்ந்து கொள்ள மனிதர்களும் இல்லை..

உணர்வுகள் இதுபோன்ற எழுத்துக்களில் உயிர் பெற்று பின் உறங்கித்தான் போகின்றன...

அன்புடன்
ரஜின்
Unknown said…
நல்ல கவிதை

மறந்துபோன

மண் வாசம்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த