Skip to main content

சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 9



















அது ஒரு நெடிய இரவு ஆனால் கணத்தில் கழிந்துதான் போய் விட்டது. நினைவுகளில் தான் அதன் நீட்சியும் நிகழ்வுகளும் வானில் மிதக்கும் மேகமாய், நீரில் நீந்தும் மீன்களாய் என்னுள் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கடத்தலிலும் மீண்டும் மீண்டும் இழுத்து பிடித்து நிறுத்தி மீண்டும் மீண்டும் காண்கிறேன் உன்னோடு கழிந்த அந்த கனவு இராத்திரியை...!!!!

நீயும் நானும் தொட்டு விடும் தூரத்தில் இருந்தும் தொடுதலை புறம்தள்ளி மெல்லிய வெளிச்சத்தில் வார்த்தைளாலேயே தழுவிக் கொண்ட அற்புத கணம்..! உனக்கு பிடித்த இசை அறை எங்கும் பரவியிருக்க எனக்குப் பிடித்த வானத்தை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு உன்னோடு பேசிக் கொண்டிருந்த ஒரு நீண்ட இரவு அது..!

எதற்கோ சிரித்தாய், எதற்கோ அழுதாய், எதற்கோ ஆச்சர்யப்பட்டாய், எதற்கோ கோபப்பட்டாய், எதற்கோ அமைதியானாய் ரசிப்பின் உச்சத்தில் லயித்துக் கிடந்த என் அற்புத உணர்வுகளின் சங்கமத்தில் எனக்குள் கிளர்ந்த உணர்வுகளை நான் காதலென்றேன் இல்லை இல்லை கடவுளென்றாய் நீ!

நீண்டுக் கொண்டிருந்த அந்த இரவினை அலட்சியமாய் ஆக்கிரமித்த உன் அழகினை வார்த்தைகளுக்குள் கொண்டுவர முடியாமல் தடுமாற்றமாய் ஏதேதோ உளறி கடைசியில் என் பெயரே நான் மறந்தது நினைவிருக்கிறதா?

விடியாமல் இருந்தாலென்ன...? என்றாய். நீ விலகாமல் இருப்பாயா...? என்றேன் நான்...!உன் கண்களால் என் கண்கள் ஒத்தி சத்தியாமாய் விலகேன் என்ற பின் புன்னைகயாய் படர்ந்த என் காதல் வார்த்தைகளாய் கருக் கொண்டு ஒரு கவிதையாய் இதோ.. இதோ... ஜனித்தே விடுவேன் என்று என்னை மிரட்டியதை உணர்ந்தேதான் வெள்ளை பேப்பரையும் பேனாவையும் ஒரு பிரசவம் பார்க்கும் தாதி போல என்னிடம் வைத்தாயா?

கிறுக்கலாய் என் காதல் போதையை பேதை உன் முன்பு ஒரு காகிதத்தில் கவிதையாய் அரங்கேற்றுக் கொண்டிருதேன்.நீ ரசிப்பாய் காகிதத்தை கவிதைக்காய் பார்த்தாய். நான் காதலாய் உன் கலைந்த கேசத்தை பார்த்தேன். இரவு எப்போதும் அழகானது ஆழமானது அதை இன்னும் அலங்கரித்து எனை மூர்ச்சையாக்காமல் விடமாட்டேன் என்ற கங்கணம் கட்டிக் கொண்டு உன் அருகாமை என்னிடம் போட்டியிட்டு கொண்டிருந்தது.

வாழ்க்கையில் எல்லாமே அழகுதான். ஆமாம் அத்துமீறல்கள் இல்லாமல் சூழலுடன் பொருந்தியிருத்தல் அழகுதானே. அவசரங்கள் கொண்ட மனிதர்கள் வேகத்தில் மோகத்தில் தொலைத்த அழுக்குகளைப் போட்டு நிரப்பி வைக்க இன்னொரு பூமி வேண்டுமே பெண்ணே....! காமத்தை துடைத்து விட்டு காதலோடு கழிந்து கொண்டிருந்ததுதானே அந்த இரவின் புனிதம்...!

சப்தமில்லா அந்த இரவில் பூமி சுழற்சியின் சூட்சுமத்தில் ஜனித்த உயிர்கள் எல்லாம் உறக்கத்தில் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்த போது உன்னோடான இருப்பில் வாழ்க்கையை அளந்து கொண்டிருந்தேன் நான். காமமென்ற பூட்டினை போட்டு பூட்டி காதலை சிறை வைத்து விட்டு நிம்மதியை தேடும் மானுடர்களிடமிருந்து எப்படி பூக்கும் மனிதம்? மோகத்திற்காக காதலை ஒரு புழுவைப் போன்று தூண்டிலில் சொருகி காமமென்னும் மீனை தேடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு உயிரோடு கிடைக்கும் காமத்தையும் காப்பாற்றத் தெரியாது, காதலையும் சீராட்டத் தெரியாது...!

எதார்த்தமாய் சப்தமின்றி நீ வார்த்தைகளை இறைத்து கொண்டிருந்தாய்.. நான் தானியம் பொறுக்கும் குருவியாய் செவிகளுக்குள் உன் வார்த்தைகளை வாங்கி மூளையில் சேமித்துக் கொண்டிருந்தேன். உன்னை பிடிப்பதற்கு என்ன காரணமாயிருக்கும் என்று யோசித்திருக்கிறேன் பல முறை ஆனால் அந்த கேள்வியின் முடிச்சவிழ்ந்த அந்த இராத்திரியில் நான் ஸ்தம்பித்துதான் போனேன்...!

புறத்தில் அழகாயிருக்கும் ஒரு அபத்தத்தை உடன் வைத்திருப்பது ஆபத்தென்று அறியாதவனில்லை நான் ஆனாலும் பெரும்பாலும் மனித மூளைகள் கூட்டிக் கழித்து நேசிப்பது புற அழகினையும் அந்த அழகின் மூலம் அடைய நினைக்கும் காமத்தினையும்...

ஆனால்..

புறம் ஒரு காரணமாய் இருக்கலாம் ஆனால் அகம் தெளிவான ஒரு துணையிடம் இருந்து விட்டால் ஒரு ஆணிடமிருந்து பெண்ணும், பெண்ணிடமிருந்து ஆணும் அறிய வேண்டியவை ஏராளம். மூளையை சிறையிலிட்டு ஓராயிரம் கற்பிதங்கள் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு எல்லாமே அபத்தம்... ஆனால் உடல் தாண்டிய, உருவம் தாண்டிய சூட்சும உணர்வுகளை தேடிப் பிடித்து தன்னுள் நிறைத்துக் கொள்ளும் சூட்சுமங்கள் அறிந்தவர்கள் மிகக் குறைவு...

நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்....எதார்த்தமாய் நீ கேள்வி கேட்டாய்? உன் காதல் கவிதைகளில் பெரும்பாலும் இருக்கும் பெண் யாரென்று...? கேள்விக்கான பதிலை எடுத்து வர ஆழ் மனதிற்குள் சீறிப் பாய்ந்தேன்..! அந்த கணத்தில் என்னை நான் மறந்து, புறம் மறந்து பதிலைக் கைக் கொண்டு சலனமில்லா பதிலாய் நானே மாறிப் போனேன்....!

' எமது கவிதைகளின் கரு காதலாய் இருக்கும் பட்சத்தில் அதற்கு எப்போது ஒரு பெண் அவசியம் இல்லை. கவிதை சமைக்க காதெலென்ற ஒற்றை உணர்வு ஊற்றாய் எம்முள் பிராவாகமெடுக்க பாலினத்தின் தேவைகள் எல்லாம் அற்றுப் போய் எம்முள் இருக்கும் எப்போதும் விலகாப் பெண்ணை உற்று நோக்கியே யாம் கவிதைகள் படைக்கிறோம். பெண்ணின் இயல்பில்லா ஆண் மகனுமில்லை....ஆணின் இயல்பில்லா பெண்மகளும் இல்லை.

ஏதோ ஒரு காலத்தில் எமது அறிவுகள் குளத்துக்குள் நீச்சலடிக்கும் மீன் குஞ்சாய் பரிணாமம் கொண்டிருந்த சமயத்து எமக்கு பெண்ணென்ற பொருளே மையமாய் இருந்திருக்கலாம். பேறறிவுக் கடலுக்குள் யாம் வந்து விழுந்த கணத்தில் பாலினம் பார்த்து கவி செய்யும் வழக்கம் அவ்வப்போது பழக்கத்தின் காரணமாய் வந்து போனாலும் மிகையாய் யாம் செய்யும் கவிகளுக்கு யாமே கரு...! எம்மில் இருக்கும் பெண்மையே உரு.....!

விவரங்கள் அற்ற மானுடர்களுக்கு எப்போதும் பெண்ணொன்று வேண்டும் மையமாய்; அந்த கருவினை சுவராகக் கொண்டு சித்திரம் வரைதல் தவறென்றும் பகிரல் ஆகாது. அது ஒரு நிலை. உயரம் தாண்டும் பந்தயத்தில் எட்டவொண்ணா உயரங்களை தாண்டியவனுக்கு அது ஒரு கலை. யாம் கடந்து விட்டோம். எம்மில் நிறைந்து விட்டோம்...!

கவிசெய்ய பெண்ணென்று ஒன்று இனி எமக்குத் தனித்து தேவையில்லை....எம்முள்ளும், எமைச் சுற்றியும் நிறைந்து கிடக்கும் பிராணனின் போக்கில் எமது மூளைகளிலிருந்து ஜனிக்கிறது காதல்...இதற்கு எதற்கு புறத்தில் எனக்கு ஒரு தேடல்?

யாம் எம்மையும் எமக்குள் இருக்கும் காதலையும் பெண்ணாய் சித்தரித்து கற்பனை என்னும் எதார்த்தத்தில் தான் செய்கிறோம் கவிதைகள்...."

மொழியாய் வடிவம் கொண்ட விடையை வாங்கிச் சிரித்துக் கொண்ட காதல் பெண்ணே உன்னையும் என்னுள் இருந்துதானே படைத்தேன்...? இந்த நீண்ட இரவை கழித்தேன் என்று நான் கூறி முடிக்கையில் சூரியன் வருவதற்கு சில நாழிகைகளே இருந்தது....

என்னோடே இருப்பேன்; எனை விட்டு விலகேன் என்ற வார்த்தைகள் பகின்ற நீ சூட்சுமமாய் என்னுள் போய் ஒளிந்து கொண்டாய்.....! நானே நீயானாய், நீயே நானானேன்...காதலும், நானும், சூழலும் ஒன்றாய்ப் போனோம்....!

இப்போதெல்லாம் எப்போது அழைத்தாலும் சொடுக்கும் நேரத்தில் நீ வருவாய் காதலாய் எனை நிறைப்பாய்...! என் கவிதைகளுக்குள் நித்தியமாய், பெண்ணாய் உன்னை கற்பித்துக் கொள்வதில் எம்மைத் தாண்டிய வாசிப்பாளர்களுக்கு எளிதாய் புரிய வைக்கும் யுத்தியை மறைத்து வைத்திருக்கிறேனன்றி வேறு என்ன தான் தேவையிருக்கிறது எனக்கு...?

சுவாசமே எமக்குள் காதலாகிறது....! காதலே எம்மை சுவாசிக்கிறது...!


(இன்னும் சுவாசிப்போம்....)


தேவா. S

Comments

ஐயா..இண்ட்லியில ஓட்டு போடறதுக்கும் எதுவும் ரூல்ஸ் இங்குங்களா...?..!! :-))
சுவாசமே...காதலாக is always Fresh :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல