Skip to main content

இது ஒரு ரகசிய நாடகமே...!


























கருப்பையில் ஜீவனாய் நான் நிறையும் முன்பு ஜடமாய், உயிராய் எங்கெங்கெல்லாம் விரவிக் கிடந்தது எனது பிண்டத்தின் மூலங்கள்? தாயின் கருமுட்டையோடு, தந்தையின் உயிரணு கலந்து ஒரு தசைக் கோளமாய் கிடந்த என் உடலுக்குள் உயிர் ஊற்றிய பிரமாண்டம் எது?

அங்கும் இங்கும் ஒரு சருகைப் போல நான் பறந்து பறந்து என்ன கொண்டு செல்லப் போகிறேன்? எல்லாம் நிறையும், எல்லாம் குறையும் என்றறிந்த மாத்திரத்தில் நான் எல்லாம் விட்டு போகாமல் உழல காரணமான உறவுகளும் என்னை இங்கு கொண்டு வந்த சூத்திரதாரியின் நிகழ்வுதானே?

எங்கே தொடங்கியது எனது பயணம்? எப்போது முடியும்? எனக்கு முன்னும் பின்னும் காலம் என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும்.. சிற்றின்பத்தால் நிறைந்து கிடக்கும் வாழ்க்கையை ஒரு நாய்க்கு போடும் சிறு ரொட்டியைப் போல போட்டு விட்டு பேரின்பத்தை மறைத்து வைத்து அதை அடைய மனமற்று போகும் போது அடையும் சூத்திரத்தை சூசகமாய் பிரபஞ்சத்துக்குள் கரைத்துப் போட்டது யார்?

அங்கிங்கெனாதபடி ஆடிக் கொண்டிருக்கும் சக்தி துகள்களின் ஆட்டமே நடராஜ தத்துவமென்று முத்திரை பதித்து சூசக கருத்தை உட்பொருளாய் வைத்து சென்ற மானுடர்களின் மனக்கூட்டு பிரபஞ்சத்தோடு இயைந்தேதான் இருந்ததா?

உடையப் போகும் குமிழியைப் போல, சிதறப் போகும் கண்ணாடி போல தன்னின் இயல்பு கொண்ட மானுடக் கூட்டம் தொடை தட்டி கொக்கரிக்கும் அறியாமை நீங்க ஜென்மங்களாய் பிறந்து பிறந்துதான் பிணி தீர்க்க வேண்டுமா?

காதலையும் காமத்தையும் இன்ன பிற இன்ப துன்பங்களையும் தானே தன்னில் தோன்றவிட்டு மறைந்து கிடக்கும் சக்தியை கடவுளென்று சொல்லி ஒரு சிலைக்குள்ளோ அல்லது ஒரு கட்டிடத்துக்குள்ளோ அல்லது ஒரு வேதத்துக்குள்ளோ மட்டுப் படுத்தி விட முடியுமா?

சூட்சுமத்தில், எதுவுமற்ற சூன்யத்தில் இருந்து எல்லாம் ஜனித்தது என்றால் இன்றும் சூட்சுமத்திலிருந்து பொருள்களையும் பொருளற்ற விதிகளையும் மனமற்று பேரியக்கத்தோடு ஒன்றிய ஒரு நிகழ்வாய் நாம் சமைத்து விட முடியாதா?

கலைகளும் கலைகளின் மூலங்களும், படைப்புகளும் படைப்புகளின் மூலமும் மனித மூளையின் எந்த இடத்திலிருந்து ஜனித்தாலும் ஒரு படைப்பாளி வெறுமையிலிருந்துதானே எல்லாம் படைக்கிறான். வெறுமையிலிருந்து அவன் படைப்பதாலேயே அவன் சூன்யத்திலிருந்து எல்லாவற்றையும் ஜனிப்பித்த பெருங்கருணையின் செயலை ஒத்துதானே செயல் படுகிறான்?

ஒவ்வொரு கலைஞனும் ஒவ்வொரு படைப்பாளியும் மனித மூளைகளில் கனவிலும் உதித்திராத ஒரு இசையையும், ஒரு கவிதையையும் ஒரு ஓவியத்தையும் ஒரு கதையையும் கட்டுரையையும் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்தி தீரும் போது அவனின் ஆழமும் மூலமும் இறையை ஒத்ததுதானே?

இந்த ரகசிய நாடகத்தினை உணர முடியாமல் இந்த கட்டுரையையும் உணர முடியாமல் மெல்ல விலகி சென்று உள்ளே எழும் நேர், எதிர் மறை எண்ணங்களின் சூத்திரதாரியும் நாம் தானே...!!!!

விளக்கம் கொடுத்தலும், கேட்டலும் தாண்டி ஆழமாய் தன்னை அறியும் பொழுதில் தோன்றும் கடவுளை யாருக்கு காட்ட? மெய்பித்தலுக்கு உட்படா ஒன்றை மெய்பிக்க சொல்லுவதும், மெய்பிப்பேன் என்பதும் சத்தியத்தில் பொய்தானே...!!!

அது இருக்கிறது...காலங்கள் கடந்தும் வெவ்வேறாய் ஜனிக்கிறது...நகர்கிறது...!


அவ்வளவே....!

தேவா. S

Comments

அருமையான பதிவு.
மனிதனது பிறப்புப் பற்றிய விபரணங்கள்,

கலைஞன், படைப்பாளி பற்றிய உளவியற் கருத்துக்கள், மெய் ஞானம் தேடும் மனிதனது உள்ளக்கருத்துக்கள் எனப் பல விடயங்களைத் தாங்கி வந்திருக்கிறது இந்தப் பதிவு.

அருமை சகோதரா.
மிக வித்யாசமான கருத்து பகிர்வு. நன்றி.
வித்தியாசமான பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த