யாரோ எழுதிய கவிதையை
யாரோ வாசிக்கிறார்கள்
எங்கோ பரிமாறப்பட வேண்டிய
காதல்கள் எங்கோ...
எடுத்துக் கொள்ளப்படுகின்றன...
இலக்குகள் மாறி
எப்போதும் பயணிக்கும்
கவிதை வரிகள்
இடம் மாறி பூக்களை
பூக்க வைக்கின்றன;
விலாசம் மாறியே
எப்போதும் செல்லும்
படைப்பாளிகளின் கற்பனைகள்
எப்போதாவது
எதேச்சையாக படைப்பின்
மூலத்தை யாரோ ஒரு
வாசிப்பாளனிடம் கொண்டு சேர்த்து
ஜெயித்துக் கொள்வதும் உண்டு;
மற்றபடி...
படைப்பாளியின் உலகமென்பது...
அவனும், அவன் கவிதைகளும்
கிளர்ந்தெழும் எண்ணங்களும்
வார்த்தைகளும், எழுத்துக்களும்...
மறுபடிகள் இல்லாத படைப்புகளுமாய்
அந்திச் சூரியனும், அதிகாலை நிலாவும்
முகம் வருடும் சொரசொரப்பான
கடற்கரை உப்புக் காற்றும்....
நட்சத்திரங்களும், வானமும்
மனிதக் கூச்சல்கள் கடந்த
ஆழ்ந்த மெளனமும் என்று...
சராசரிகள் கடந்த சங்கமத்தில்
எப்போதும் தேடுகிறது இல்லாத..
ஒரு விடையை...!
தேவா. S
Comments
TM 5.
வாசிப்பாளனிடம் கொண்டு சேர்த்து
ஜெயித்துக் கொள்வதும் உண்டு;//
அந்த சுகம் சில சமயம் நானும் அனுபவித்ததுண்டு