Skip to main content

முள்ளிவாய்க்கால் சோகம்...நான்காமாண்டு நினைவுநாள்!



நான்காண்டுகள் ஓடோடி விட்டன. ஆறாத வடுக்களாய் இன்னமும் நம்முள் பரவிக்கிடக்கும் சோகச் சுவடுகளை காலம் எப்போதும் அழித்து விடமுடியாது. உலகில் இருக்கும் தொன்மையான கட்டிடங்கள், பறவைகள், விலங்குகள், நினைவுச் சின்னங்கள் எல்லாம் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும் என்று மனிதம் பெருமைப் பேசிக் கொண்டிருந்த போதே மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மூத்த மொழி பேசி வாழ்ந்த ஒரு தேசிய இனம்  கொத்து கொத்தாக ஈழத்தில் இன்றுதான்  அழித்தொழிக்கப்பட்டது. அடிப்படையில் சுதந்திரமாய் தன் சொந்த மண்ணில் வாழ விரும்பிய ஒரே காரணத்திற்காக போராடிய மக்களை அநீதி கொன்றழித்ததை  பதிந்து கொண்டு காலம் தலைகுனிந்து கொண்டது.

சொந்த மண்ணில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பூர்வகுடிகளின் வாழ்வியியல் உரிமைப் போரட்டத்தை தீவிரவாதம் என்று முத்திரை குத்திய மிருகங்கள் இதோ நம் கண் முன்னே ஆர்ப்பட்டமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சர்வதேசம் எப்போதுமே வெட்கக்கேட்டினை தனது முகத்தில் வடுக்களாய் ஏந்தியபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது. வரலாற்றை திருப்பிப் பார்த்தால்  சத்தியமும் நீதியும் எவ்வளவு ஜெயித்திருக்கிறதோ அதற்குச் சரிக்கு சமமாக அல்லது கூடுதலாக அநீதியும் அடக்குமுறையும் ஜெயித்திருக்கிறது. மனிதநேயம் என்னும் வார்த்தை எப்போதும் சாதகபாதகங்களைப் பார்த்தே பயன்படுத்தப்பட்டுமிருக்கிறது.

பொதுமக்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும், அதுவும் பெண்களை வன்புணர்ச்சி செய்தும் சிங்களவன் செய்த கொலைகளை படங்களாகாவும், காணொளியாகவும் கண்ட பின்னரும் விழித்துக் கொள்ளாத சர்வதேசத்தின் மனிதநேயம் இனி இருந்தால்தான் என்ன செத்தால்தான் என்ன? அன்பும் கருணையும், சகிப்புத்தன்மையும் கொண்ட இந்தியப் பேரரசு தனது அண்டை தேசத்தில் நடாத்தப்பட்ட பெரும் இன அழிப்பினை அதுவும் தனது தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழரை கோடி தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் கொன்றழிக்கப்பட்டதை குரூரமாய் அனுமதித்ததும் அதை தடுத்து நிறுத்தாமல், தட்டிக்கேட்காமல் இன்னமும் கள்ள மெளனம் சாதிப்பதும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை தமிழர்களுக்கும் செய்த ஒரு வரலாற்று துரோகம்.

வரலாற்றில் தமிழன் எப்போதுமே இரண்டு பிரிவாய்த்தான் இருந்திருக்கிறான். அநீதியை எதிர்த்துப் போராட ஒரு கூட்டம் இருந்தால் அவனைக் காட்டிக் கொடுக்க ஒரு கூட்டம் அவன் கூடவே வளர்ந்து வரும். தங்களின் வயிறு வளர்க்க மானத்தைக் கூட அது இழக்கும். மானத்தை விற்று தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் காத்துக் கொள்ள ஈழத்தில் போராடிய மக்களுக்கு நடுவே ஒரு கூட்டமும், தாய்த்தமிழகத்தில் ஒரு கூட்டமும் அது போல இருந்தது. அந்தக் கூட்டம் தமிழர்கள் முன் தாங்களும் தமிழர்கள்தான் என்று நீலிக் கண்ணீர் வடித்தபடியே திரைக்குப் பின்னால் எல்லா நாடகங்களையும் அரங்கேற்றியும் கொண்டது.

இதோ நான்காண்டுகளைக் கடந்து விட்ட இந்தச் சூழலில் தாய்த்தமிழகத்தில் ஈழம் நிஜமான உணர்வாளர்களால் எந்த வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே அளவு போலிகளாலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை பிரச்சினைகள் தமிழகத்தில் இப்போது விரவிக் கிடந்தாலும் ஈழத்தைப் பேசாமல் எந்த ஒரு அரசியல்வாதியும் அரசியலை செய்ய முடியாது என்னும் ஒரு அசாதரண சூழலை ஈழ மண்ணில் உயிரிழந்த எம்மக்களின் மகத்தான தியாகம் இன்று உருவாக்கிக் காட்டி இருக்கிறது. போர் என்றால் உயிர் இழப்பு இருக்கத்தானே செய்யும் என்று சொன்னவர்களும், மழை விட்டாலும் தூவானம் விடாது என்று சொன்னவர்களும் இன்று ஈழம், ஈழம் என்று குய்யோ முறையோ என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

தொண்டைகளைச் செருமிக் கொண்டு பல தீர்மானங்களை ஈழமக்களுக்கு ஆதரவாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள், இந்தியப் பேரரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கிறார்கள். கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்கிறார்கள். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இதனால் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது...

என்றாலும் கொத்துக் கொத்தாய் வேதியல் குண்டுகளை போட்டு வெள்ளைக் கொடிகளை ஏந்திவந்தவர்களையும் கனரக ஆயுதங்களைக் கொண்டு சிங்களப் பெளத்த பேரினவாத அரசு அழித்துக் கொண்டிருந்த போது தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகள்  வீதியில் இறங்கி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்காமல் அடக்கி வாசித்த அசிங்கத்தையும் வலியோடு நாம் நினைவு கூற வேண்டி இருக்கிறது.

ஈழத்தின் போரட்டத்தை தயவு செய்து  ஆயுதம் ஏந்திய அகிம்சைக்கு எதிரான போராட்டமாய் பார்த்து விடாதீர்கள் தோழர்களே...!!! தந்தை செல்வா என்னும் ஈழத்து காந்தி அகிம்சை வழியில் போராடிப் போராடி அகிம்சை என்பது மனிதர்களுக்கான போரட்டம் மிருகங்களுக்கானது அல்ல என்று உணர்ந்த பொழுதில் வேறு வழியின்றி அடித்த வலியைத் தாங்காது திருப்பி அடித்தவர்கள் நாம் என்பதை உணருங்கள்.

தமித்தாய்க்கு நூறு கோடி ரூபாய்க்கு சிலைவைக்க திட்டங்கள் தீட்டப்படும் இதே நாம் வாழும் காலக்கட்டத்தில்தான் தமிழ் பேசிய ரத்தமும் சதையுமான நமது உறவுகள் கொன்றழிக்கப்பட்டனர் என்ற உயிர் உறைக்கும் உண்மையை அறியுங்கள்! ஈழத்தமிழர்களின் போராட்டம் தமிழர் வரலாற்றில் வீரம் செறிந்த பக்கங்களில் பொறிக்கப்படவேண்டிய ஒரு போராட்டம் என்பதையும் அதை வழிநடத்திய நமது அண்ணன் பிரபாகரன் தான் என்றென்றும் தமிழகளின் நலம் விரும்பிய தலைவன் என்றும் நமது பிள்ளைகளிடம் அழுத்திச் சொல்லுங்கள்.

வரலாறு என்பது எங்கோ யாரோ எழுதுவது அல்ல தொடர்ச்சியாய் நம் நினைவுகளில் ஊறிக் கிடப்பது. ஒவ்வொரு மே 17 மற்றும் 18களில் நிகழ்ந்தேறிய இன அழிப்பில் வீரச்சாவடைந்த நம் உறவுகளுக்கு ஒவ்வொரு வருடமும் மறக்காமல் நமது அஞ்சலிகளைச் செலுத்துவதோடு ஜனநாயக ரீதியில் நமது வஞ்சத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதையும் எப்போதும் நினைவு கொள்ளுங்கள்.

தமிழர் நலம் பேசுகிற, தமிழர் வாழ்வுரிமை பற்றிய தொலைநோக்குப் பார்வைகள் கொண்ட, தனித்தமிழ் ஈழத்திற்கு ஆதரவு கொடுக்கிற அரசியல் கட்சிகளை மட்டுமே தமிழத்தில் ஆதரியுங்கள். வீதி இறங்கிப் போராடும் அரசியல் நாடக சக்திகள் சாதாரண மக்களாகிய நம்மை  நீங்கள் என்ன செய்து சாதித்தீர்கள் என்று  கேலிகள் செய்யக் கூடும்..... இணையத்தில் எழுதி என்ன கிழித்து விடுவீர்கள் என்று நம்மை ஊனப்படுத்தி இணையப்போராளிகள் என்று ஏளனம் செய்யக்கூடும்....

அவர்களின் பிரச்சாரங்களையும் பரப்புரைகளையும், காலில்  போட்டு மிதியுங்கள்...!!!! உங்களின் மனசாட்சியிடம் கேள்விகள் கேட்டு....யார் தமிழர் நலம் விரும்பிகள்...?யார் தமிழர்களின் வியர்வையை மூலதனமாக்கி நாடகமாடுகிறார்கள் என்பதை கணியுங்கள். ...!

நான் என்னை சேர்ந்த பத்து பேரிடம் சொல்வேன்...நீங்கள் உங்களைச் சேர்ந்த பத்து பேரிடம் சொல்வீர்கள்....சிறுகச் சிறுக நமது உணர்வுகள் பற்றிப் பரவும். வீதி இறங்காமலேயே....மேடை நாடகங்கள் நிகழ்த்தாமலேயே....மெளனமாய் வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் நமது உணர்வுகளைப் வெளிப்படுத்துவோம்.

ஆயிரம் பேர்கள் இந்தக்கட்டுரையப் படித்து தமிழகமெங்கும் பரவி இந்தக்கருத்துக்கள் சென்று சேரப்போவதில்லை ஆனால் என்னைச் சேர்ந்த ஒரு பத்து பேர் வாசிக்க அதில் ஒருவர் உணர்வு பெறக்கூடும்...என்ற விருப்பத்தையே இங்கே எழுத்துக்களாக்கி இருக்கிறோம்...! காலம் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது...நம்மை  கீழே இறக்கி வைத்த காலம் மீண்டும் நம்மை மேலே ஏற்றும்....அன்று தமிழர்கள் கொடி...பட்டொளி வீசி பறக்கும்...!

மே17, 18ல் முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த அத்தனை தமிழ் உறவுகளுக்கும் வீரவணக்கங்கள்!!!!


தேவா. S



Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த