Skip to main content

ராஜா ராணி....!


இரண்டு கனத்த ப்ளாஷ் பேக்குகள் ஒரு மையக்கதை. ராஜாவாகவும் ராணியாகவும் என்னை கற்பனை செய்து பார்த்துக் கொண்டே படம் பார்த்தேன், முழுத் திரைப்படத்தையும்  அலுப்பு வராத வகையில் ஜஸ்ட் லைக் தட் காட்சிப்படுத்திக் காட்டி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஒரு மழையில் நனைவது போன்ற காட்சிகளின் தொகுப்பு. என்னதான் காமெடி காட்சிகளில் நாம் சிரித்தாலும் மீண்டும் நம்மை ஒரு மென் சோகத்துக்குள் கொண்டு வந்து விடும் திரைக்கதை என்று... லயித்துப் போய் பார்த்து முடித்தேன் ராஜா ராணியை...ஆங்காங்கே தென்பட்ட சில சொதப்பல்களை சகித்தபடியே

மென் சோகம் என்பதை எப்படி வார்த்தைப்படுத்த என்று எனக்கு தெரியவில்லை.  சுகத்தை கொடுக்கும் வலிகளை மென்சோகம் என்று சொல்லலாம். இரண்டு தோற்றுப் போன காதல்களை பதியம் போட்டுக் கொண்ட ஒரு ரோஜா செடியில் மெல்லிய மொட்டொன்று அரும்பி அது இதழ்களை விரிக்கும் அழகினை விழிவிரிய பார்க்கும் சுகம் அலாதியானது. நயன்தாரா படபடக்கும் பட்டாம்பூச்சியாய் பரபரக்கும் போதும் சரி, ஜெய்க்காக  ரிஜிஸ்தர் ஆபிசில் காலையிலிருந்து மாலை வரை காத்திருக்கும் மென்மையிலும் சரி, தன் அப்பாவான சத்யராஜ் சொல்வதைக் கேட்டு நடு ராத்திரியில் ஜெய்யின் வீட்டுக் கதவை தட்டி அவனை வெளியே அனுப்புங்க என்று கோபம் காட்டும் இடத்திலும், காரில் சத்யராஜுடன் வெடித்து அழுவதிலும்....நடிப்பின் உச்சாணிக் கொம்பை  தொட்டிருக்கிறார். கவர்ச்சி வேடங்களைக் கொடுத்து அவரை வீணடித்த இயக்குனர்கள் நயனை நயமாக பயன்படுத்தினால் இன்னும் அவரது அற்புத நடிப்பினை பார்த்து ரசிக்கும் கொடுப்பினை தமிழ் ரசிகர்களுக்கு கிடைக்கும்.

ஒரு அட்டகாசமான அப்பா மகள் உறவை, புரிதல் கொண்ட நவீன அப்பா சத்யராஜும், நயனும் தூள் கிளப்பி இருக்கிறார்கள். மகள்கள் அப்பாக்களுக்கு பியர் வாங்கிக் கொடுத்து சந்தோசமாய் தோளோடு தோள் சேர்த்து நடந்து இனி வரும் காலங்களில் செய்திகளை பகிரலாம். அப்பாக்களும் காதலை எதிர்க்கும் முரட்டு பெற்றோர்களை "அதிகமா டிவி நாடகம் பார்த்து கெட்டுப் போயிருப்பாம் போலம்மா.." என்று இயல்பாய் கூறி புரிந்தும் கொள்ளலாம். இயல்பான இது போன்ற மென்மையான வாழ்க்கை உறுத்தல் இல்லாமல் அமைந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமாய்த்தான் இருக்கும். 

ஜெய் நயனின் காதலைத் துறந்து அமெரிக்கா செல்வதற்கு அவரது போலீஸ் அப்பாவின் பிடிவாதம்தான் காரணம் என்று கூறுவது அவ்வளவு வலுவானதாய் இல்லை. திரைப்படம் தான் என்றாலும் சட்டென்று தன்னை நேசிக்கும் உயிருக்குயிரான பெண்ணை அதுவும் முழு ஆதரவு கொடுக்கும் அவளின் பணக்கார அப்பா இருக்கும் போது எந்த ஆணும் விட்டுச் செல்ல மாட்டான் என்பதே உண்மை. ஜெய் ஜஸ்ட் லைக் தட் நயன்தாராவை பிரிந்து செல்வதற்கு சொல்லப்படும் காரணம் படு மொக்கை. பிரிதல்தான் கதையை தூக்கி நிமிர்த்தி கொண்டு செல்லும் என்று முடிவு செய்த பின்பு அந்த இடத்தை இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அப்பாவியாய் ஏற்கெனவே ஜெய்யை எங்கேயும் எப்போதும் படத்தில் நாம் பார்த்தாயிற்று. அது போன்று நடிப்பது அவருக்கு நன்றாகத்தான் வருகிறது என்றாலும் மெலிதாய் ஒரு அலுப்பு தட்டுவதையும் தாண்டி அவர் வரும் ஆரம்பக் கட்டக் காட்சிகள் நம்மை சிரிக்க வைத்து விடுகின்றன. இயல்பாய் நடிப்பதில் ஆர்யா கில்லாடி. அவரது டயலாக் டெலிவரிகள் எல்லாமே அழுத்தம் திருத்தமாய்  இது நடிப்புடா என்று தொடை தட்டாது. ஏங்க வீட்டு சாவிய என் வொய்ஃப் வந்தா கொடுத்துடுறீங்களா நான் கொஞ்சம் வெளில போறேன்.... என்று கேட்கும் பக்கத்து வீட்டுக்காரரின் குரல் தொனிதான் ஆர்யாவின் டயலாக் டெலிவரி ஸ்டைல். நயன் தாராவின் தோற்றுப் போன காதலைக் கேட்டு அவருக்குள் மெலிதாய் துளிர்க்கும் காதலை அவர் வெளிப்படுத்தும்  இடம் அட்டகாசம். ஆர்யா + நயன் தாரா கெமிஸ்ட்ரி மட்டும் இல்லை பிஸிக்ஸ், பையாலஜி, மேத்தமெட்டிக்ஸ், தமிழ், ஆங்கிலம் எல்லாமே அட்டகாசம். 

ஆர்யாவிற்கு இயக்குனர் வைத்திருக்கும் ப்ளாஷ் பேக்கில் நஸ்ரியா பிரதர் பிரதர் என்று ஆர்யாவை  வெறுப்பது போல நடிக்கிறார். ஆர்யா அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். அப்பா அம்மா யாரும் இல்லாமல் ஹோமில் வளரும் நஸ்ரியா அம்மா மடியில் இதுவரையில் நான் படுத்தது இல்லை என்று கூறி விட்டு ஆர்யாவின் மடியில் படுக்கிறார். ஆர்யா கிறிஸ்துவர், நஸ்ரியாவின் பிறந்த நாளுக்கு அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறார். சிறிது நாள் கழித்து பெற்றோர்களிடம் சொல்லி முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறுகிறார்.

ஏன் பெற்றோர்களிடம் சொல்லி முறைப்படி திருமணம் செய்தால்தான் என்ன..? அவர் கிறிஸ்துவர் இவள் இந்து என்பது பிரச்சினையாய் இருக்குமோ என்று நாமே யூகம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த ப்ளாஸ்பேக்கில் எப்படி ஜெய் நயனை விட்டுப் பிரிவதற்கு ஒரு வலுவான காரணமில்லையோ அதே மாதிரி இந்த இடத்தில் இயக்குனர்....மீண்டும் டொட்டடாய்ங் ஆகிறார்.

தாலி கட்டிய நஸ்ரியாவின் பிறந்த நாள் அன்று அவரோடு ஊர் சுற்றுகிறார் ஆர்யா.  சாலையின் இந்தப் பக்கத்திலிருந்து அந்த பக்கம் சென்று ஏதோ வாங்கிவர செல்லும் நஸ்ரியா திரும்புகையில் எதிர்பாராத விதமாக கார் ஆக்ஸிடண்டில் மரணமடைகிறார். விரக்தியில் இருக்கும் ஆர்யா பெற்றோர்கள் வற்புறுத்தலுக்காய் நயனை கைப் பிடிக்கிறார்.

நயனுக்கும், ஆர்யாவிற்குமான வாழ்க்கைக்கு மெளனராகம் படத்தின் கதையை மையக்கருவாய் எடுத்திருக்கிறார் இயக்குனர். காதலில் தோற்று பிறகு திருமணம் செய்துகொண்டு வாழும் இடத்தில் புரிதல் வருவதாய் காட்டித் தொலைப்பது தமிழ் சினிமாவின் மரபு. அதையே வழுவாமல் இந்த இயக்குனரும் செய்திருக்கிறார். வேறு வழி திரைப்படத்தை பார்க்கும் அத்தனை பேரும் சமூகம் கொடுக்கும் நிர்ப்பந்தம் அது. நயனை பிரியும் ஜெய் இறந்து போய்விட்டதாய் கேள்விப் பட்டுதான் நயன் தன் காதலை விட்டு விட்டு வேறு ஒருவரை மணம் முடிக்கிறார்...அதே ஜெய் க்ளைமாக்ஸில் சென்னை ஏர்போட்டிலேயே வேலை பார்க்கிறார்...என்று வேறு இயக்குனர் காட்டுகிறார்...

அமெரிக்கா போயாவது உன் காதலனை அழைத்து வருவேன்னு சொல்ற ஒரு பவர்புல் தொழிலதிபர் அப்பாவை வச்சுக்கிட்டு இந்தப் பொண்ணு ஜெய் செத்தது உண்மையா இல்லையான்னு விசாரிக்காம, அந்த ஊர்லயே வேல பாக்குற ஜெய் பத்தி ஒண்ணுமே தெரியாம இருந்துச்சுன்றது எல்லாம்... ஹ்ம்ம்.. ஓ.கே.. ஒ.கே...ன்னு சொல்லி நாமஓவர் ரூல் செய்யத்தான் வேண்டும்.

படத்தோட மொத்த மையக்கருவா இயக்குனர் சொல்ல வர்றது.. எவன் செத்தாலும் உன் வாழ்க்கை ஓடிட்டுதான் இருக்கும் அதுக்காக போனவங்களுக்காக வருத்தப்படாதீங்கன்ற ஒரு மொக்கை அபத்தமான ஒரு மேட்டர்தான். காதல்ல தோத்தா வேறு காதல் கிடைக்கும்னே ரெண்டு காதலை தோக்க வச்சு அதுக்கு  பிறகு ஒரு கல்யாணத்த வச்சு....முடியலை பாஸ்.....

ஒருத்தர் போனா இன்னொருத்தர் வருவாங்க  இயக்குனர் சார்...ஆனா ஒருத்தர் போனதோட வலி இருக்கே அது சாகுற வரைக்கும் மனசுல இருந்து போகாது. காதல் ஒருத்தர் வாழ்க்கையில பல தடவை வந்துட்டுப் போகும் ஆனா ஒவ்வொரு தடவையும் அது உயிரைக் கொடுத்து உயிரை எடுக்கும். ஜெய் நயனை ஏமாத்திட்டுப் போய் அமெரிக்க வேலை, அது இதுன்னு காட்டி அவர் செத்துப் போனதா நயனை நம்பவைச்சு அப்புறம் வேற பொண்ண கல்யாணம் பண்ணிட்டு....அப்டியே வாழ்ந்துட்டு இருக்காரு.. நயனை பார்த்த பின்னாடி கூட கண்டுக்காம கல் நெஞ்சா இருக்காருன்னு சொல்ற இடம் எல்லாம் சுத்தமா ஏத்துக்கவே முடியாது.

என்னமோ பசங்க எல்லாம் பொண்ணுங்களை கழட்டி விட்டுட்டு வசதி வாய்ப்பு வந்தா ஓடிப்போய்டுவாங்கன்னு எப்டி சார் இளவரசன்களின் மரணத்தை பார்த்த பிறகும் உங்களால படம் எடுக்க முடியுது...? ஒரு காதலை இழக்க எப்படி ஒரு பெண் தயாரில்லையோ அதுக்கு கொஞ்சம் கூட பசங்களும் குறைஞ்சவங்க கிடையாது. எத்தனை வலிகள் இருந்தாலும் பெண்ணை அடையணும்னு ஒரு ஆண் தான் நினைப்பான்... நம்ம சமூக கட்டுப்பாட்டுல பெண் தான் தன்னுடைய மனதை மாத்திக்க ஓராயிரம் வாய்ப்புகளை அவளோட குடும்பம் திணிக்குது.

தோற்றுப் போன காதலை இதைவிட நாகரீகமா சொல்ல முடியாத அளவுக்கா தமிழ் சினிமா படைப்பாளிகள் வறட்சியா இருக்காங்க..? காதலில் தோற்றுப் போய் வேறு வழி இல்லாமல் வேறு ஒருவனின் கையைப் பிடிக்கும் ஒரு ஆணும் சரி ஒரு பெண்ணும் சரி....கடைசி வரை தனது காதலை மறக்க முடியாது. இங்க படத்துல அவுங்க மறக்க வசதியா ஒருத்திய கொன்னுட்டு இன்னொருத்தனை ஏமாத்துனவனா காட்டி இருக்க உங்களோட  நியாயம் சர்வ நிச்சயமா துரோகம்னு நான் அடிச்சு சொல்லுவேன்.

படத்தில் பாத்திரங்களின் நடிப்பு, காட்சியமைப்பு, ஓரளவிற்கு இசைன்னு உங்களை கை தூக்கி விட்டு இருந்தாலும்....ஒட்டு மொத்த கதையும் செம சொதப்பல். ஏன்னா நீங்க படத்துல சொல்லி இருக்க மாதிரி யாருக்கும் காதலும் வராது...அப்படியே வந்தாலும் இப்படி சினிமாத்தனமா காட்சிகளின் வசதிக்காக தோற்க வச்ச மாதிரி தோத்தும் போகாது... அப்படியே தோத்துப் போனாலும் உடனே சூடு ஆறுவதற்கு முன்னால வேற கல்யாணமும் பண்ணிக்க மாட்டாங்க....அப்டியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் தன்னுடைய காதலனையோ காதலியையோ அவ்ளோ சீக்கிரம் மறந்தும் தொலைக்க மாட்டாங்க....

படம் முழுதும் என்னை ராஜாவாக கற்பனை செய்து கொண்டேன்...ராணியாக கற்பனை செய்து கொண்டேன்...ஆனால் உங்கள் கதையில் வந்த ராஜ ராணிகள் இல்லை எனது உணர்வுகள்...

அவர்கள் கடந்த கால காதலை கண்ணியப்படுத்திக் கொண்டு நிகழ்காலத்தில் புரிதலோடு நகரும் ராஜா ராணிகள்...!

என்னடா இவன் எழுத ஆரம்பிக்கும் போது படம் நல்லா இருக்குன்னு சொல்றமாதிரி இருந்துச்சு முடிக்கும் போது சொதப்பல்ன்ற மாதிரி முடிக்கிறானேன்னு யோசிக்கிறீங்களா..?

நான் என்ன பாஸ் பண்றது எது எது நல்ல இருக்கோ அதை நல்லா இருக்குனுதான் சொல்லிட்டோம்ல..


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா....!!!!!! 


தேவா சுப்பையா...




Comments

அழகான விமர்சனம் அண்ணா...
உண்மையை உள்ளபடி சொல்லும் பகிர்வு....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல