Skip to main content

காற்றில் எந்தன் கீதம்...!


காலையிலேயே மழை வந்து ஜன்னலைத் தட்டி என்னை எழுப்பியது. கண்ணாடி ஜன்னலின் வழியே ஊர்ந்து கொண்டிருந்த மழைத்துளிகளை ஜன்னலை திறக்காமலேயே போர்வைக்குள் இருந்து பாதித் தூக்கத்தில் ரசிக்கும் சுகத்தை விவரிக்க மொழிகளே கிடையாதுதான். மழை விருந்தாளியைப் போல வந்தாலும் கவிதையைப் போல வசீகரித்தாலும் எனக்கு மழை காதலியாய்த்தான் தெரியும் என்று நான் சொல்லி முடிக்கும் முன்னரே உனக்கு வேறு எப்படி தோன்றும்..? நீங்கள் மனதுக்குள் கேள்வி கேட்பது எனக்கும் நன்றாகவே கேட்கிறது. காதலி என்ற ஒரு உறவுக்கும் திருமணத்திற்கும் ஒரு பந்தமும் இல்லை என்று நான் சொல்லி முடிக்கும் முன்பே ஒரு கூட்டம்  நீ எந்த மாதிரியான கலாச்சாரத்தை புகுத்த விரும்புகிறாய் என்று கேள்வி கேட்டு போர்கொடிகள் உயர்த்தும் அபாயம் இருப்பதால் இந்த இடத்தில் ஒரு யு டர்ன் அடித்துக் கொள்ளுவோம்.

சூடான தேநீரோடு பால்கனியை வீட்டுக்குள் கொண்டு வரும் கண்ணாடி ஜன்னலின் முன்பு நாற்காலியை இழுத்துப் போட்டு வசதியாய் அமர்ந்து கொண்டேன். ஒரு நாள் ஓய்வினை ஓய்வாகவே இருந்து அனுபவித்து விடவேண்டுமென்ற என் பிடிவாதத்தை ரசிக்கவே இந்த வார இறுதியில் வந்தாயா மழையே..? கண்ணடித்துக் கேட்டேன்... மழை சிலீர்.....சிலீர் என்று கண்ணாடியில் வந்து விழுந்து என்னைப் பார்த்து சிரித்தது. சூடான கோப்பைதான் 14 டிகிரி செல்சியஸ் தட்ப வெட்பத்தில் அந்த சூடு எனக்கு தேவையாய் இருந்தது. பெரும்பாலும் சுடச் சுட தேநீர் அருந்தும் நெருப்புக் கோழி அல்ல நான். மிதமான சூட்டில் அரைமணி நேரம் மிடறு மிடறாய் தேநீரை விழுங்கும் ஒரு சோம்பேறி ராட்சசன். அரக்க பரக்க வேலை செய்யும் ஒரு வாழ்க்கை முறையில் சளனமின்றி வாழ விரும்பும் என் கனவுகள் எல்லாம் வார இறுதியில் என்னை சூழ்ந்து கொண்டு கெஞ்ச நான் அவற்றை கொஞ்ச நிதானமாய் அந்த தினம் நகரும்.

விடுமுறை தினத்தில் யாரையும் சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்து விட்டேன். தலையணை அளவுள்ள பெரிய, பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை எடுத்து வலுக்கட்டாயமாக படித்துக் என்னை அறிவு ஜீவியாக்கும் அவசரத்தை எல்லாம் எரித்துப் போட்டுவிட்டேன். உடையார் படித்து முடித்து விட்டு தேவரடியார்களைப் பற்றியும், யாளிகளை பற்றியும் நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இப்படித்தான் எதையோ படிக்க எங்கோ போய் விழுந்து விடுகிறேன். எதையோ கேட்க வேறு எதுவோ எனக்குள் புகுந்து விடுகிறது. எதையோ பார்க்க அது இந்த பூமியை விட்டு மெல்ல என்னை வெளியே தள்ளிக் கொண்டு போய் நிறுத்தி ஏதேதோ கதைகள் சொல்கிறது. ஒரு போர் என்னவெல்லாம் செய்யும் என்று யோசித்து பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சோழப் போர்களின் வெற்றிகள் எத்தனை குடும்பங்களை அழித்து பொருட்களை கொள்ளையடித்து கொண்டு வரப்பட்டதாயிருக்கும் என்று யோசிக்கும் போதே திகிலாய் இருக்கிறது எனக்கு.

மழை இன்னும் உக்கிரமாய் பெய்ய ஆரம்பத்திருந்தது. எழுந்து பால்கனிக்கு வந்தேன் மனதால் ஒரு சிகரட்டை எடுத்து உதட்டில் பொருத்திக் கொண்டேன். விரல்களை சிகரெட் லைட்டராய் பாவித்து பற்ற வைத்துக் கொண்டேன். வெற்று விரல்களில் சிகரட் சூட்சுமமாய் தொற்றிக் கொண்டிருந்தது. ஆழமாய் புகையை இழுத்து விட்டு கண்களை மூடிக் கொண்டேன். உள்ளுக்குள் உஷ்ணத்தை கற்பனையாய் அனுமதித்தேன். ஆழமாய் அடி வயிறு வரை புகை சென்று உடல் முழுதும் பரவியது. சிகரெட் விரலில் தேய்ந்து கொண்டிருந்தது போல ஒரு பிரமை. மெதுவாய் புகையை வெளி விடுவது போல உதடு குவித்து ஊதினேன். எல்லாமே பிரமைதான். கற்பனையில் எதுவேண்டுமோ அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று யாரோ சொன்னது அசரீரியாய் எனக்குக் கேட்டது. 

நிக்கோடினை உடலுக்குள் ஊற்றிக் கொள்ளாத சிகரெட்டை யார் வேண்டுமானாலும் பற்ற வைத்துக் கொள்ள முடியும்.  சிகரெட் என்ன சிகரெட்....மது கூட இப்படி அருந்தலாம். பாடலாம், ஆடலாம், ஓடலாம், விருப்பமான பெண்ணை நாமே படைக்கலாம். சிருஷ்டியே ஒரு மாயைதனே. மாயைக்குள் உட்கார்ந்து நிஜத்தை தேடும் அபத்தத்திற்குள் சிக்காத ஒரு சுமூக வாழ்வு வாழ்ந்து போகலாம். மரணம் என்ற ஒன்றே அப்போது இல்லாமல் போகும். நிக்கோடின் என்ன செய்யுமோ அதை என் கற்பனை உள்ளுக்குள் செய்து கொண்டிருந்தது.  அச்சச்சோ....இதை படித்து விட்டு எல்லோரும் இப்படியே புகைக்க ஆரம்பித்தால் சிகரெட் உற்பத்தியாளர்களும் வியாபரிகளும் என் மீது வழக்கல்லவா போட்டு விடுவார்கள்...?

இதில் என்ன ஒரு வசதி இப்படியான சிகரெட் தீரவே தீராது. வேண்டுமென்றால் எப்போது வேண்டுமானலும் எடுத்து புகைத்துக் கொள்ளலாம். புகைக்கும் போது ஏற்படும் அனுபவம்தான் அலாதியானதே அன்றி ஒரு போதும் சிகரெட்டோ அல்லது அந்தப் புகையோ ரசிக்கத் தகுந்தது அல்ல. நிஜத்தில் சிகரெட் பிடிப்பவர்களைப் பார்த்தால் எனக்கு பாவமாய் தோன்றும். ஆமாம்.....எப்போதும் கையில் ஒரு பெட்டியை சுமந்து செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. கூடவே ஒரு லைட்டர் கூட. இது எல்லாம் போக தொடர்ந்து புகை பிடிப்பவர் அருகில் கூட நாம் நிற்க முடியாது. சிகரெட் நாற்றம் நம்மை இரண்டடி தூரவே நிற்க வைத்து விடுவதோடு அவர்களின் நுரையீரலை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து ஒரு கட்டத்தில் சுவாசிக்கவே முடியாமல் செய்து ஏதேதோ நோய்களையும் கொடுத்து விடுகிறது.

என் கற்பனை சிகரெட் நிஜ சிகரெட்டுக்கு எதிரி. ஆசை வேறு திருப்தி வேறு. எனக்கு திருப்தியாய் இருந்த சிகரெட்டை அணைக்காமலேயே மழையில் தூக்கி எறிந்தேன். வானம் முழுதும் மேகங்கள் தண்ணீராய் அலைந்து கொண்டிருந்தன. மழை முகத்தில் வந்து அடித்து விளையாடியது முன்பொரு தினத்தில் ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டிருக்கையில் அவள் துப்பட்டா வந்து என் முகத்தில் மோதியதை நியாபகப் டுத்தியது. எங்கே இருக்கிறாளோ...? என்ன செய்கிறாளோ...? இன்னுமொரு சிகரெட் குடிக்கலாமோ என்று தோன்றியது. வேண்டாம் கற்பனை சிகரெட் என்றாலும் ஒன்று போதும் என்று புத்தி சொல்லியது.

ஷோபனாவிற்கு நன்றாக பாடவரும். கல்லூரியில் படித்தபோது ஒரு இன்டர்காலேஜ் போட்டிக்காக கல்லூரியிலிருந்து பல போட்டிகளில் கலந்து கொள்ள நாங்கள் சென்றிருந்தோம். அப்போது ஒரு இரவு பரமக்குடியில் நாங்கள் தங்கவேண்டியதாய் இருந்தது. நான் பாட்டுப் போட்டிக்கும் ஷோபனா பேச்சுப் போட்டிக்கும், பட்டிமன்றத்துக்கும் சென்றிருந்தோம் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். ஆமாம் ஷோபனாதான் பாட்டுப் போட்டிக்கு வந்திருந்தாள். அபாரமான குரல் வளம் அதாவது இந்த சூப்பர் சிங்கர் சீசன் எல்லாம் என்னவென்றால் தெரியாத காலம் அது. போட்டியில் நாங்கள் நிறையவே வென்றோம். போட்டிகள் எல்லாம் முடிந்த பின்பு என்னை யாரும் பேசச் சொல்லி கேட்கவில்லை ஆனால் ஷோபனாவை பாடச் சொல்லி கேட்டோம்.

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே....

சப்த நாடிகளும் ஒடுங்கிப் போய் பின் ட்ராப் சைலன்ஸில் எல்லோரும் ஷோபனாவையே பார்த்துக் கொண்டிருந்தோம். சங்கீதம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு ஞான சூன்யத்துக்கு அன்றுதான் சங்கீத பாடம் நடந்தேறியது. எத்தனை திறப்புகள்? எத்தனை அறிவுகள்? எவ்வளவு ஞானம்? இந்தப் புவியெங்கும் பரவிக்கிடக்கிறது. அழகு என்ற புறத்தோற்றம் கடந்த எவ்வளவு பெரிய வசீகரம் இந்தப் பெண்ணிடம் இருக்கிறது. இந்தக் குரல், இந்த சப்தம் எவ்வளவு ரம்யமாய் காற்றில் மிதந்து வந்து ஒவ்வொரு செவிக்குள்ளும் நிறைகிறது. இது இசையா? இது கடவுளா? இது காதலா? இது காமமா? யார் எழுதிய பாடல் இது...? வார்த்தைகளை இழைத்து, இழைத்து தன்னுள் புகுத்திக் கொண்ட அந்த மயக்கும் ராகத்தின் பெயர்தான் என்ன? இதற்கு மெட்டமைத்தவர் யார்? மெட்டமைத்தவனின் கற்பனை என்ன? எந்த சூழலில் இந்த இசை அவன் புத்திக்குள் உதயமானது? வளைந்து நெளிந்து செல்லும் ஒரு நதியைப் போல, மென்மையாய் தடவிச் செல்லும் ஒரு தென்றலைப் போல காற்றை செதுக்கிய சிற்பி யார்...? அவனின் அனுபவம் என்ன? அவன் என்ன யோசித்து இந்த பாடலுக்கு இசை அமைத்தான்? 

இந்த பாடலை எழுத பொருத்தமான சூழலைச் சொன்ன படைப்பாளி யார்? அவனுக்குள் கட்டியெழுப்பப்பட்ட கதாபாத்திரத்திற்கு தாக்கம் எங்கிருந்து கிடைத்தது? என்று யோசிக்க யோசிக்க எல்லாமே சூட்சுமத்திலிருந்து பிறந்தது, நினைவுகளில் இருந்து எழுந்தது, கற்பனைகளில் இருந்து மலர்ந்தது என்று புரிந்தது. ஸ்தூலமாம் உடலுக்கு சூட்சுமமே முதல் என்ற சைவச்சிந்தாந்த வழிமுறை பளார் என்று என் கன்னத்தில் அறைந்து பிரபஞ்சப் பெருவெளிக்குள் என்னை தர தரவென்று இழுத்துச் செல்ல....

அங்கே கலைகளின் நாயகனின்  இடைவிடாத பெரு நடனம் நிகந்து கொண்டே இருப்பது பிடிபட்டது. ஒவ்வொரு அசைவிலும் ஒரு நிகழ்வு, ஒவ்வொரு அசைவிலும் ஒரு உயிர், ஒவ்வொரு அசைவிலும் ஒரு மரணம்....

ஜதி தரும் அமுதம் தனி...தனி... தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்...
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்....

ஆடல் நாயகனின் ஆட்டம் அது. இடைவிடாத ஆட்டம். ஒரு கால் தூக்கி மறு காலில் அகங்காரத்தை போட்டு அழுந்த மிதித்து ஆணவத்தை இடுப்பில் அணிந்து தீமையை கழுத்தில் நிறுத்திக் கொண்டு சடாமுடி விரிய ஆடும் தீப்பிழம்பின் நடனம் அது. சப்த நாடியும் ஒடுங்கிப் போக மீண்டும் ஷோபனாவின் பாடலுக்குள் கொண்டு வந்து இறக்கி விட்டன என் நினைவுகள். என்ன ஒரு பாடல்..? இதைத் திரையில் ஜானகி அம்மா பாடி இருப்பார். அந்த குரல், அந்த ஆசிர்வாதம் ஷோபனாவிற்கு நிறையவே இருந்ததை என்னால் உணர முடிந்தது. சங்கீதம் என்பது சப்தங்களை சரியாய் ஏற்றி, இறக்கி சலனமில்லாத பேருண்மையை சொல்லுமிடம் என்பது புரிந்தது.

நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே நெஞ்சம் தேடும்....

எனக்கு கேவி கேவி அழவேண்டும் போன்றிருந்தது. மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது எனக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. எனக்கு முன் சீட்டில் ஷோபனா உட்கார்ந்திருந்தது.. திரும்பி திரும்பி என்னிடம் பேசிக் கொண்டே வந்தது. பேச்சுப் போட்டியில் நன்றாகப் பேசியதாக வாழ்த்தியது. நான் பேசுவதை விட பாடுவது கடினம் என்றேன். அதற்கு எல்லாமே பயிற்சிதான் என்று பதில் சொன்னது. என் பயிற்சி போகிற போக்கில் நிகழ்ந்து விடும். கோர்வையாய் செய்திகளைப் பகிரவும், பகிர ஏறி நிற்கும் மேடை பற்றிய பயமும் இல்லாமல் இருந்தால் போதுமென்றேன் நான். நீ நிறைய பேசு என்றாள் அவள்....நிறைய பாடு என்றேன் நான்.....

அன்று அவள் துப்பட்டா காற்றில் வந்து என் முகம் தொட்ட போது தோன்றிய அதே உணர்வை இந்த மழைச்சாரலும்....கொடுத்திருக்கிறது. அது ஒன்றும் காதல் அல்ல... என்று நான் சொன்னலும் காதல் இல்லை என்றும் சொல்லமாட்டேன். அது வேறு. அந்த ஈர்ப்பு சாகும் வரை எனக்குள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் எனக்கு. இது தொட்டுக்கொள்ள துணை தேடும் ஈர்ப்பு அல்ல. தொடாமல் ஆதியின் சுயரூபத்தை ரசிக்க முனையும் ஆழ்மனத்தின் தேடல், ஆசை எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம்.

மழை கொஞ்சம் விட்டிருந்தது. சிறு தூரலாகவாவது தயவு செய்து இன்று முழுதும் நின்று செல் என் உயிரே என்று மழையிடம் வேண்டினேன்...!

வள்ளலாரைப் பற்றி எழுத வேண்டும், சங்ககாலத்திலிருந்து தமிழ் மண்ணில் எப்போதும் பேசப்படும் மறவர்களைப் பற்றி படிக்க வேண்டும், எழுத வேண்டும்...., சிவகங்கைச் சீமை பற்றி நிறைய அறிந்து அந்த மண்ணின் மனிதர்களை, வாழ்க்கையை, சிதிலமடைந்து கிடக்கும் காளையார்கோயிலுக்கு எதிரே நிகழ்ந்தேறிய கொடுமைகளை, அந்த சிவப்பு மண்ணில் படிந்து கிடக்கும் மனிதர்களின் ரத்தக் கறைகள் சொல்லும் சோகங்களை, அவர்களின் வீரத்தை எழுத வேண்டும்....

பரத்தையர்கள் வாழ்வு பற்றி, தேவரடியார்களும் தாசிகளும் வெவ்வேறு வகை என்பது பற்றி, எப்போதும் உள்ளுக்குள் மோதும் காதலைப் பற்றி, மனிதர்கள் எப்போதும் பேசத் தயங்கும் காமத்தைப் பற்றி, மதத்திற்குள் முடங்கிக் கிடக்கும் கடவுளைப் பற்றி....நிறைய எழுத வேண்டும். அதற்கு நிறைய வாசிக்க வேண்டும்.....

என்று இந்த விடுமுறையிலும்  ஆசைப்பட்டேன். சட்டென்று ஓடிப்போகும் இந்த காலச் சக்கரத்தை யாரவது இழுத்து பிடித்து கொஞ்சம் நிறுத்துங்களேன்...இந்த வாழ்க்கை முழுதும் தீரத் தீர வாழ்ந்து முடித்து விட்டு நான் வருகிறேன்.  

மழை மறுபடி பிடித்துக் கொண்டது.


மறுபடி எதுவும் செய்யாமல் மழையை வேடிக்கப் பார்க்க ஆரம்பித்திருந்தேன்.




தேவா சுப்பையா....






Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த