Skip to main content

காலம் வரைந்த கலைஞன் - ரெம்ப்ராண்ட்!


மேலே இருக்கும் ரெம்ப்ராண்ட்டின் ஓவியத்தை மெர்சியிடம் மார்க் கிராஸ் காட்டுகிறார். மார்க் கிராஸ் ஒரு ஓவியரும் கூடத்தான், ஓவியரும் கூடத்தான் என்று சொல்லும் போதே அவர் வேறு எதுவாகவோ இருக்கவேண்டும் தானே...?! ஆமாம் அவர் களிமண்ணால் சிற்பங்கள் செய்யும் சிற்பியும் கூட. அந்த பாத்திரத்தில் நடித்தவருக்கு குறைந்தபட்சம் 70 வயதாவது இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கொஞ்சம் ஐன்ஸ்டீனின் சாயல்வேறு அவருக்கு. அவர் பெண்களை மட்டுமே படமாக வரைந்து கொண்டு பின் களிமண்ணால் செதுக்கி செதுக்கி சிற்பம் செய்வார். பெண் என்றால் ஏதோ ஒரு பெண்ணின் சிலையாய் அது இருந்து விடமுடியாது. நிர்வாண மாடலாய் ஒரு பெண்ணை நிற்க வைத்து முதலில் பெண்ணின் உடலை வரைந்து கொண்டு பின் அந்தப் பெண்ணை கொண்டு அவர் சிலையும் செய்தாக வேண்டும்.

நிர்வாணம் என்ற சொல் வெறுமனே விஷமற்ற பாம்பைப் போன்றது ஆனால் பெண்ணின் நிர்வாணம் என்பது கலை என்னும் விஷம் நிரம்பிய நாகத்தைப் போன்றது. அது அழகு. அதுவே விஷம். பெண்ணின் உடல், அதன் வளைவு நெளிவுகள், அந்த  உடலில் இருக்கும் சூட்சும குறிப்புகள், மேடு பள்ளங்கள் என்று காமம் என்ற சொல்லை ஒரு உளி எடுத்து செதுக்கி எறிந்து விட்டு பார்த்தோமானால் கலை என்று எதைச் சொல்கிறேன் என்பது விளங்கும். பொதுவாகவே காமம் உள்ளதை உள்ளபடி பார்க்க விடுவதில்லை. அது எதிர்பார்ப்போடு எப்போதும் அலையும் ஒரு மிருகம். எப்போது பாயும் என்று சொல்லவே முடியாது. மிருகத்தை உயிரோடு வைத்துக் கொண்டு ஒரு கலைஞனால் படைக்க முடியாது. ரசிக்க முடியாது. உறங்க முடியாது. 

ஹென்றி மாட்டீஸ்

மெர்சி, மார்க் கிராஸிடம் மாடலாக வேலை செய்ய வந்திருக்கும் பெண் என்பதையும், த ஆர்ட்டிஸ்ட் அண்ட் மாடல் என்ற திரைப்படத்தின் கதை என்ன என்பதையும், அந்த திரைப்படம் என்ன மாதிரியான அதிர்வுகளை எனக்குள் உருவாக்கியது என்பதை எல்லாம் இப்போது நாம் பார்க்கப் போவதில்லை. படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பு படத்தில் இருக்கும் விசயங்களை பற்றியும் அது பகிர்ந்திருக்கும் செய்திகளைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பி இணையத்தை இரண்டு மூன்று நாட்களாகவே மேய்ந்து கொண்டிருந்தேன். 1860களில் பிறந்த ஹென்றி மாட்டீஸ் என்ற பிரெஞ்ச் சிற்பியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது என்று அறிந்து கொண்டேன். இதை அறிந்து கொண்டு ஹென்றி மாட்டீஸ் எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார் என்று போய் அவரின் வாழ்க்கை வரலாற்றை தேடி அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை.  ஒருவேளை மாட்டீசின் நிஜவாழ்க்கை எனக்கு போரடித்து இந்த படத்தைப் பற்றி சொல்ல ஒன்றும் தோன்றாமல் போய்விடுமோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.

இராஜராஜ சோழனைப் பற்றிய என் ஆவலையும், தேடலையும், ப்ரியத்தையும், வரலாற்றுப் பதிவுகளில் வாசித்து அறிந்து கற்பனை செய்து வைத்திருந்த அந்த பிரம்மாண்டமான சித்திரத்தையும், சிதைத்துப் போட்டது இராஜராஜ சோழன் என்னும் தமிழ்த் திரைப்படம். சில காரியங்களை செய்யாமலேயே இந்த உலகம் இருந்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றும். அதில் ஒன்று இந்தத் திரைப்படம்.  உடையார் நாவலை வாசித்துக் கொண்டிருந்த போது சட்டென்று சிறகு விரித்துப் பறந்து போக எத்தனித்த என் கற்பனைக் கழுகினை சட், சட்டென்று சிறகு வெட்டி தரையில் இழுத்துப் போட்டுவிடும் சிவாஜியின் உஷ்ணமான மேடை நாடக நடிப்பு. 

ரெம்பிராண்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலை இந்த ஆர்டிஸ்ட் அண்ட த மாடல் படத்தில் ஒரு காட்சி வலுவாய் செய்து விடுகிறது. மேலே இருக்கும் புகைப்படத்தை தனது மாடலான மெர்சியிடம் மார்க் கிராஸ் தாத்தா காட்டுவார். இதைப் பார்த்தாயா...? ஓவியம் நன்றாக இருக்கிறதா என்று அவர் கேட்டு முடிப்பதற்கு முன்பாகவே அந்தப் பெண் ஓ....வெரி நைஸ் என்று பதில் சொல்லிவிடுவாள். இது ஒரு தலை சிறந்த ஓவியம். ஒரு நொடியில் இது நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டாளே என்ற தன் கோபத்தை ஆதங்கத்தை ஒரு படைப்பின் உன்னதத்தை உணர்ந்தவராய்....

"எந்த ஒரு விசயத்தையும் முதலில் எப்படி பார்ப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும். அதில் என்ன இருக்கிறது என்று உற்று நோக்கவேண்டும்... அது அல்லாது வெறுமனே எல்லாவற்றையும் கடந்து சென்று விடக்கூடாது என்று அதட்டிவிட்டு... மேலே இருக்கும் சித்திரத்தை பற்றி விவரிப்பார். இது போன்ற கோட்டு ஓவியங்களை பார்க்கும் போது அதன் வளைவுகளை, நெளிவுகளை நாம் கவனிக்க வேண்டும் என்பார். நடந்து செல்லும் குழந்தை முதன் முதலாய் நடக்கப் பழகுகிறது என்றும் அந்தக் குழந்தை அப்படி நடந்து பழகுவது அதற்கு ஆவலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று சொல்லிவிட்டு..... அதன் மகிழ்ச்சியை எப்படி நாம் புரிந்து கொள்வது தெரியுமா...? அந்த சிறு குழந்தையின் பக்கவாட்டு கன்னத்தை பார், அந்தப் புஷ்டியான கன்னம், முன்னால் சிரிக்கும் குழந்தையின் உப்பலான பக்கவாட்டுத் தோற்றம்.....

அந்தக் கோட்டினை உற்று நோக்கினால்தான் அந்த குழந்தையின் மகிழ்ச்சி பிடிபடும்....! அதோடு மட்டுமில்லாமல் அந்த குழந்தையை இடது புறம் கை பிடித்து அழைத்துச் செல்வது குழந்தையின் சகோதரியாய் இருக்கலாம், அவளுக்கு குழந்தைகளை பிடித்து அழைத்துச் சென்று பழக்கம் இல்லாததால் வெகு சிரத்தையாய் குனிந்து பிள்ளையை கவனமாய் அழைத்துச் செல்கிறாள்..... வலது புறம் இருப்பது குழந்தையின் அம்மாவாய் இருக்கவேண்டும். இரண்டு பிள்ளைகள் பெற்றவள் அவள், அதனால் தன் அனுபவத்தின்  மூலம் பிள்ளையை எப்படி பிடித்து நடக்க வைக்க வேண்டும் என்று அறிந்தவளாதலால், கொஞ்சம் பயமின்றியே.... அவள் குழந்தையின் கையைப் பிடித்திருக்கிறாள்...."

கிராஸ் விவரித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார். நான் படத்தை பாஸ்(Pause) செய்து நிறுத்தி விட்டு யோசிக்க ஆரம்பித்தேன். இது ஒரு படம். ஓவியம். அவ்வளவுதான். ஒரு ஓவியன் வெறும் கோடுகளால் எத்தனை விதமான உணர்வுகளைத் தனக்குள் வெளிப்படுத்தி விடுகிறான். எத்தனை அழுத்தமான நுண்ணுணர்வுகள் கொண்டவனாய் அவன் இருந்திருப்பான்..? ஒவ்வொரு சூழலையும் எவ்வளவு நுணுக்கமாய் அவன் கவனித்தவனாய் இருந்திருப்பான். தன்னைச் சுற்றி நிகழும் சிறு சிறு நிகழ்வுகளையும் அசைவுகளையும்,  உற்று கவனிக்கத் தெரிந்தவனே அதை எழுத்தில், பேச்சில், ஓவியத்தில், இசையில், ஆடலில், பாடலில் கொண்டு வரத் தெரிந்தவனாகிறான்....

இன்னும் சொல்லப் போனால் மொழிகள் என்று நாம் அறிந்து வைத்திருப்பது யாவும் ஒரு தூரமே பயணித்து கேட்டுக் கொண்டிருப்பவனுக்கு புரிதலை உண்டு பண்ணுகிறது. பேசியவர்கள் பேசியது எல்லாம் புரிந்திருந்தால் இப்படி உருவாகி இருக்குமா முரண்பாடான இந்தப் பேருலகம். இரண்டு பேர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாறி மாறி விளக்கிக் கொள்கிறார்கள். இவனின் நியாயத்தை இவனும், அவனின் நியாத்தை அவனும் நுணுக்கமாய் எடுத்தும் சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் கடைசி வரையில் ஒருவரின் வலியையோ, சோகத்தையோ, எதிர்பார்ப்பையோ ஒருவருக்கு ஒருவர் முழுதாய் புரியவைக்க முடிவதேயில்லை. மொழி இந்த உலகம் முழுவதும் தோட்டா இல்லாத துப்பாக்கியாகவே பெரும்பாலும் வெடித்துக் கொண்டிருக்கிறது.

பேசுபவர்கள் எல்லாம் நினைத்துக் கொள்கிறார்கள் தாங்கள் எல்லாவற்றையும் இந்த உலகத்துக்கு புரியவைத்துவிட்டோம் என்று. கேட்கிறவர்கள் எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள்...... என்றாவது ஒரு நாளாவது இவன் நாம் நினைப்பதை பேசிவிடமாட்டானா என்று..... ஆனால் இரண்டும் நடப்பதே இல்லை.


ஒரு கலைஞன் சராசரி மனிதர்களிடம் இருந்து எப்போதும் வித்தியாசப்பட்டே இருக்கிறான். அவனும் பேசுவான்.. ஆனால் அவன் வார்த்தைகள் அவனுக்குள் இருக்கும் நியாயத்தை மட்டும் கூர் தீட்டிக் கொள்ளும் சுயநலக் கத்திகளாக எப்போதும் இருப்பதில்லை. அவன் எதிராளியின் வலிபற்றி பேசுகிறான், எங்கோ அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு இனத்தின் விடுதலை பற்றி பேசுகிறான், அதுவரையில் அவன் சந்தித்திராத மனிதர்களின் தேவைகள் பற்றி பேசுகிறான், வானத்தையும், பூமியையும், பூமியில் படிந்து கிடக்கும் நிலையாமைப் பற்றியும், வாழ்க்கையில் சந்தோஷமாயிருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும், மனிதர்கள் மனிதர்களைப் போற்ற வேண்டிய அவசியத்தை பற்றியும் அவன் பேசிக் கொண்டே இருக்கிறான்.

பூக்களைப் பார்க்கிறான். அதன் சந்தோசத்தை ஒரு கவிதையாகவோ, ஓவியமாகவோ, புகைப்படமாகவோ, ஒரு பாடலாகவோ, இசையாகவோ வடித்து வைத்துவிட அவன் முனைகிறான். ஒரு கலைஞன் எப்போதும் தன்னைச் சுற்றி நிகழும், தான் அனுபவிக்கும் விசயங்களை கூர்மையாக சக மனிதனிடம் பகிர்ந்து செல்லவே எப்போதும் விரும்புகிறான்.

ரெம்ப்ராண்டின் ஓவியங்களை தேடித் தேடி நான் பார்க்க ஆரம்பித்தேன். வாழ்க்கையின் விவரிக்க முடியாத வேறு பக்கத்திற்கு அவை என்னை அழைத்துச் சென்றன. மனித உணர்வுகளை கோடுகளுக்குள் கொண்டு வந்து அதைக் காண்பவர்களிடம் பரிமாற்றம் செய்யக் கூடிய மந்திர சக்தி கொண்டவை அவனின் ஓவியங்கள். 1600களில் வாழ்ந்து மறைந்த அந்த டச்சுக்காரனைப் பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன அவனது ஓவியங்கள் ஆம்ஸ்ட்ர்டாமில் இருக்கும் மியூசியங்களில்.

ஏதேதோ அமானுஷ்யமான உணர்வுகளோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் போது தோன்றும் புது புது விசயங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் எந்த கலைஞன் பொருளாதாய உலகத்தில் வென்றிருக்கிறான் என்று சொல்லுங்கள் பார்ப்போம்? ரெம்ப்ராண்டின் வாழ்க்கையை அறிய முற்பட்ட எனக்கு.... அதை வாசித்து முடித்த போது மனம் கனத்துப் போயிருந்தது. அவன் மனைவியை குறுகிய காலத்திலேயே இழந்து, நான்கு குழந்தைகளைப் பெற்று குழந்தையிலேயே மூன்று பிள்ளைகளை இழந்து, பின் தன்னையும் பிள்ளையையும் பார்த்துக் கொள்ள வந்த பெண்ணை மனைவியாக்கிக் கொண்டான். அந்த பெண்ணை மாடலாகக் கொண்டு அவன் நிறைய கோட்டோவியங்களை வரைந்துமிருக்கிறான்.

கடன் தொல்லையால் தன்னிடம் இருந்த அத்தனை ஒப்பற்ற படைப்புகளையும் கொடுத்து ஈடு செய்த ரெம்ப்ராண்ட்... வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழலில் இருந்த போது உருவாக்கிய படைப்புகள்தான் வெகு பிரம்மாண்ட புகழை அவனுக்குத் தேடிக் கொடுத்திருக்கிறது.  நிறைய இருக்கிறது ரெம்ப்ராண்ட் பற்றி பேசுவதற்கு,  அவன் ஓவியங்களின் தனித்தன்மை பற்றி விவாதிப்பதற்கு.....


எந்த ஒரு தலை சிறந்த படைப்பும் தன்னைப் பற்றி மட்டும் பேசிவிட்டு வாய் மூடிக் கொள்வதில்லை. அது ஒரு ரசிகனை கிளர்வான மனோநிலைக்கு கொண்டு சென்று பல புதிரான விசயங்களைப்  பற்றி பேசுவதோடு நிறைய விசயங்களைக் கற்றுக் கொடுத்து புதுப் புது திறப்புக்களையும் கொடுக்கிறது. ஒரு படைப்பில் லயித்து முடித்து வெளியே வரும் போது அந்த படைப்பு பற்றிய பிரக்ஞை இன்றி வேறு ஏதோ ஒரு புதிய தேடலில் நீங்கள் இறங்கி இருக்கிறீர்கள் என்றால்... மிகச்சரியாய் அந்த படைப்பு வெளிப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

                                 த ஆர்ட்டிஸ்ட் அண்ட் த மாடல்
                                             (The Artist and the Model)


என்னும் திரைப்படம் வெகு நேர்த்தியாய் அந்த செயலை செய்திருக்கிறது. வேறு ஒரு கட்டுரையில் அந்த திரைப்படம் பற்றி நிறைய பேசுவேன்...!



தேவா சுப்பையா...







Comments

ரெம்ப்ராண்ட் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்... உங்கள் பதிவின் மூலமாக அந்தக் கலைஞனைப் பற்றி அறிய முடிந்தது.

நன்றி அண்ணா...
அறியாத ஒரு கலைஞரை பற்றி அறிந்து கொண்டேன்! நன்றி!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல