Skip to main content

காதல் சுகமானது....!


இப்போதும் கூட அப்படியேதானிருக்கிறது காதல்....! எதுவோ வேண்டுமென்ற ஆசைகளை எல்லாம் காலம் பக்குவக் கத்திகளை வைத்து வெட்டி எறிந்த பின்பும் இன்னமும் நம்மை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பது எது என்று யோசித்துப் பார்க்கையில் இன்னும் அழுத்தமாய், ஆழமாய் காதல் என்றால் என்னவென்று புரிகிறது. எத்தனை எழுதினாலும் அலுத்துப் போகாத காதல் இருக்கும் போது வாழ்க்கை என்ன செய்து விடும் நம்மை...?

ஏகாந்தக் கனவுகளுக்கு என்ன பெயர் இடுவது? எதையும் எதிர்பார்க்காத நேசத்தை எப்படி எழுதுவது? கடைசியாய் நாம் ஒன்றாய் அமர்ந்திருந்த அந்த மாலைக்குத்தான் எவ்வளவு பொறுமை இருந்திருக்க வேண்டும் தேன்மொழி...? எதுவுமே பேசிக்கொள்ளாத கனத்த நிமிடங்களைச் சுமந்து கொண்டு எப்படித்தான் நகர்ந்திருக்கும் அன்றைக்கு காலம்...? காதலியைப் பெறும் போது காதல் பரபரப்பான உற்சாகத்துக்கு நடுவே வலுவிழந்ததாய் போனாலும் காதலியை இழக்கும் தருணத்தில் அது ஒரு தாயாய் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தத்தான் செய்கிறது. திருமணத்துக்காக காதலித்துக் கொள்ளும் சமூக நடைமுறையில் காதலிப்பதற்காக காதலிக்கச் சொல்லிக் கொடுத்த காதலோடு தான் நான் இன்னமும் வசித்துக் கொண்டிருக்கிறேன்....

தேன்மொழி தாலியை அடிக்கடி சரி செய்தபடி தன்னோடு பேசிக் கொண்டிருந்தது பிரசாத்துக்கு கொஞ்சம் சங்கடமாயிருந்தது. 

தாம்பத்தியத்திற்குள் காதல் தைரியமாய் எட்டிப்பார்க்கும்.... இன்னும் சொல்லப் போனால் எல்லா உறவுகளுக்கும் நடுவே எழும் நேசங்களில் எல்லாம் சுதந்திரமாய் காதல் சுற்றிவரும். காதலைக் கட்டிப் போடவோ அல்லது விளக்கம் சொல்லி விதிவிலக்காக ஆக்கவோ முடியவே முடியாது. இந்த உலகின் மூலை முடுக்கெல்லாம் அது தடையின்றி திமிராய்ச் சுற்றிவரும். என் செத்துப் போன அப்பாத்தாவின் மீது இன்னமும் அது மையல் கொண்டிருக்கிறது. அவளின் வாஞ்சையான பேச்சையும், அனுசரனையான உடல் மொழியையும், நட்சத்திரமாய் ஜொலிக்கும் மூக்குத்தியையும், முழுதாய் நரைத்த தலையில் இடைஇடையே எட்டிப்பார்த்து சிரிக்கும் கருப்பு முடிகளையும்.... அள்ளிக் கட்டிய கொண்டையையும், கண்டாங்கிச் சேலையையும், குலுங்க குலுங்கச் சிரிக்கும் போது மூடிக் கொள்ளும் சிறு கண்களையும், தன் கணவன் மீதிருந்த ப்ரியத்தை வலது கையில்  பச்சையாய் குத்தியிருந்த அவளது காதலையும் .....

இன்னமும் விட்டு விலகவே இல்லை என் காதல் .

காதல் அப்படித்தான். அது ஒரு காட்டாறு, அது ஒரு புயல், அதுவே தென்றல். அது உருவாக்கும், அழிக்கும், ஆடும், பாடும் எல்லா வேடமும் இட்டுக் கொள்ளும் தன் சுயத்தை மாற்றிக் கொள்ளாமல். அதேபோல்தான் உன் தாம்பத்தியத்திற்குள்ளும் காதல் எட்டிப்பார்த்திருக்கும், உன் வாழ்க்கைத் துணையாய் அது வாழ்ந்து சிரித்துக் கொண்டுமிருக்கும்... ஆனால் காதலுக்குள் எதுவுமே நுழைந்து விட முடியாது. இந்த உலகில் சுற்றிச் சுற்றி நிகழும் எல்லாவற்றுக்கும் காதல் அவசியமாயிருக்கிறது. காதலின்றி எந்த நிகழ்வும் ரசிக்கத் தகுந்ததாய் இருக்க முடியாது ஆனால்....காதலுக்கு எதன் தேவையும், அவசியமும் கிடையவே கிடையாது....

எதன் பொருட்டோ நிகழ்ந்தால் அது காதலுமாகாது........!

பிரசாத் பேசிக் கொண்டிருந்தான். மீண்டும் தேன் மொழியைப் பார்ப்போம் என்று அவன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. 

தேன் மொழி பிரசாத்தை நிமிர்ந்து பார்த்தாள்....

மூணு வருசம் ஆச்சுல்ல பிரசாத்... நாம கடைசியா பாத்து......எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல....உன்னோட என்னால பேசாமவும் இருக்க முடியலை, ஆனா பேசுறது தப்புன்னும் தோணுது...

கோயில் பிரகாரத்தில் யாரும் இல்லாமல் இருந்தார்கள். பெரும்பாலும் பிரதோஷ தினத்தில் சிவன் கோயிலுக்கு வரும் கூட்டம் மற்ற நாட்களில் எட்டிப்பார்ப்பதே இல்லை. கபாலி யார்? ஏன் இங்கே கோயில் வந்தது...? எதற்கு கோயிலுக்கு வரவேண்டும்..? கோயிலில் என்ன கிடைக்கிறது? என்றெல்லாம் பார்த்து வருவதில்லை சனம்....

பிரதோஷ தினத்தில் நந்தியிடம் வேண்டுகோள் வைத்தால் வாழ்க்கையில் பணக்காரர்களாகி விடலாம் என்ற ஆசை. முட்டி முட்டி சாமி கும்பிடுகிறார்கள். அவசர அவசரமாய் ஓம்நமசிவாய சொல்கிறார்கள். சம்போ மகாதேவா என்கிறார்கள். உடலை பவ்யமாய் வைத்துக் கொள்கிறார்கள். தாழ்ந்த குரலில் பேசுகிறார்கள். பாவமாய் முகத்தை வைத்துக் கொள்கிறார்கள். சிவபுராணத்தை சப்தமாய் சொல்கிறார்கள். ஏனோ ஒரு வருத்தத்தை விரும்பியே வரவழைத்துக் கொண்டு சோகமாய் பிரகாரம் சுற்றி வருகிறார்கள். எல்லாம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது ஊர் வம்பு பேசுகிறார்கள். சாமி கும்பிடுவதை ஒழுக்கமாய் நினைத்துக் கொள்கிறார்கள்.... அப்படி  கும்பிடாவிட்டால் ஒரு குற்ற உணர்சி வந்துவிடுகிறது இவர்களுக்கு. இந்தக் குற்ற உணர்ச்சி மதமாச்சர்யம் பார்க்காமல் எல்லா மதத்தில் இருப்பவர்களுக்கும் வந்து விடுகிறது. அப்படி வரவைத்ததுதான் மதவாதிகளின் வெற்றியும் கூட....

ஆன்மீகம் என்பது தேடல் என்பது விளங்காதவரை வாழ்க்கை என்பது என்ன என்று யாருக்கும் விளங்கப் போவதில்லை. வாழ்க்கை விளங்காத போது காதல் என்னவென்று எப்படி விளங்கும்? காதல் என்னவென்று விளங்காமல் போனதால் ஏற்பட்ட அபத்தம்தான் இன்றைக்கு பூமியை பிடித்திருக்கும் மிகப்பெரிய பிணி. காதல் காதல் என்று உச்சரித்தால் எல்லோருடைய காதிலும் காமம், காமம் என்றுதான் பெரும்பாலும் விழுகிறது.

தேனுவை நிமிர்ந்து பார்த்தான் பிரசாத்.

நாம் சந்தித்தது தற்செயலானதுதான் தேனு...!  எனக்குள்ள என்ன இருக்குன்னு நான் உன்கிட்ட சொன்னேன்.  உணர்வோடு பேசினதால கொஞ்சம் உரைநடையாவே சொல்லிட்டேன்...

உன்னை காதலிச்சது உண்மை. இப்போ காதலிக்கிறதும் உண்மை. காதலை நான் திருமணத்தோட தொடர்புபடுத்திப் பார்த்தது கிடையாது. பார்க்கப்போறதும் கிடையாது. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி காதலிக்க காதல் மட்டும் போதும். எனக்கு உன்னைப் பிடிக்கும்... நாம காதலிச்சோம் ஆனா திருமணம் செஞ்சுக்கல, செஞ்சுக்குற சூழல் அமையலை... அதுக்காக உன்னை நினைச்சு ஏங்கி நான் வேறு திருமணம் செய்யாம இருக்கப் போறதும் கிடையாது. திருமணங்கறது சமூகத் தேவை. வாழ்க்கைச் சுழற்சியின் நிர்ப்பந்தம். அந்த நிர்ப்பந்தம் இல்லாம போற வாழ்க்கை அமைப்பு எனக்கு இல்ல... அதனால அதை விட்டு நான் விலகவும் முடியாது. அதே நேரத்துல நீ, உன் மீதிருந்த காதல் அது எல்லாம் இல்லவே இல்லன்னு மறைச்சுக்கிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரியும் வாழ முடியாது....

உனக்கு ஒரு பாதை... எனக்கு ஒரு பாதை....

என் காதல் என் நினைவுகள். உன் காதல் உன் நினைவுகள். என்கிட்ட பேச குற்ற உணர்ச்சி வர்றதுக்கு காரணம் காதலை இன்னமும் எதிர்ப்பார்ப்புக்குள்ளயே நீ வச்சிட்டு இருக்கறதுதான்....

எதிர்பாராம உன்னை நான் சந்திச்சேன். காதல் வயப்பட்டோம். சூழல் நம்மள வேறு, வேறு திசைக்கு விரட்டிச்சு, இப்போ ஏதிர்பாராம மறுபடி கோயில்ல சந்திச்சேன். நாம சந்தோஷமாவே மறுபடி நம்ம திசையில நடக்கப் போறோம்... அவ்ளோதான்...!

இன்னும் சொல்லப்போனால்...நீ குற்ற உணர்ச்சியோட என்னை சந்திக்கிறதும், பேசுறதும் இனிமே அமையவே கூடாதுன்னும் தோணுது.... 

கோயிலுக்கு ஏதேதோ எண்ணங்களோட மனுசங்க வர்ற மாதிரி வாழ்க்கைக்குள்ளயும் வந்துடுறாங்க  தேனு....! இங்க திருமணம், தாம்பத்யம், கொடுக்கல், வாங்கல், காசு, பணம், சொத்து, பிள்ளைங்க, படிப்பு, கடமைகள் தாண்டி இன்னமும் நிறைய இருக்கு....

பிரசாத் சிரித்தான்.

எப்பவும் போல இப்பவும் நீயே பேசி முடிச்சுட்ட பிரசாத். என்னைச் சுற்றி இருக்குற உலகம் நீ சொன்னதை விளங்கிக்காது.... ஆனா உன்னை எனக்குத் தெரியும். எல்லாத்துக்கும் மேல உன்னை ரொம்பப் பிடிக்கும்....

என்றாவது ஒரு நாள்...
நான் இறந்த செய்தி கேள்விப்பட்டால்...
என் கல்லறையில் வந்து
செடி ஒன்றை நட்டு வைத்து விட்டுப் போ...
என் ப்ரியக் காதலனே...!

சொல்லிவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டாள்  தேன்மொழி... கிளம்பலாம்... ப்ரசாத்....... என்றாள்.

எப்போதும் போல இனிமேலும்
உனக்கான கவிதை வரிகளை
நான் காதல் என்ற பெயரில்
கிறுக்கிக் கொண்டுதான் இருப்பேன்...
என் வார்த்தைகளுக்குள் ஊன்றி நிற்கும்
மெளன மரத்தின் கிளைகளில்
கூவிக் கொண்டிருக்கும் குயில்கள்
எல்லாம் உனக்கான பாடலைத்தான்
பாடிக் கொண்டிருக்கும்....

நீ கிளம்பு தேன்மொழி... நான் கொஞ்ச நேரம் ஆகும் கிளம்ப... சிரித்தபடியே சொன்னான் பிரசாத். 

தேன்மொழி போய் வெகுநேரம் ஆகியும் கோயில் வாசலைப் பார்த்தபடி இருந்த பிரசாத் சம்மணமிட்டு அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

இனிமேல் தேனை சந்திக்க வைத்து விடாதே காலமே.......

யோசித்தபடியே தன்னுள் காணாமல் போயிருந்தான்...!



தேவா சுப்பையா...






Comments

திருமணத்துக்காக காதலித்துக் கொள்ளும் சமூக நடைமுறையில் காதலிப்பதற்காக காதலிக்கச் சொல்லிக் கொடுத்த காதலோடு தான் நான் இன்னமும் வசித்துக் கொண்டிருக்கிறேன்....//

Superb ...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல