Skip to main content

புத்தாண்டு....!


நிறைய எதிர்பார்ப்புகள் கனவுகளோடதான் ஒவ்வொரு வருடமும் நம்மை நோக்கி வருது. எல்லாமே நல்லபடியா நடக்கணும்ன்ற ஆசையோட ஹேப்பி நியூ இயர்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கை குலுக்கி சிறு புன்னகையோட இந்த டிசம்பர் 31ன எல்லோரும் கடந்து போக நினைக்கிறோம். நியூ இயர்க்கு என்ன ப்ளான்னு என்கிட்ட எப்பவும் நண்பர்கள் கேட்கும் போதும் எல்லாம் ஒரு புன்னகையோட  நான் கடந்து போயிடுறேன். ஏன்னா என்கிட்ட எப்பவுமே எதுக்குமே ப்ளான்ஸ் இருந்ததே கிடையாது. சரியோ தவறோ  கொண்டாட்டங்கள் மனித வாழ்க்கையோட ஆதாரமா இருந்து இந்த வாழ்க்கையோட அர்த்தத்தை சூசகமா தெரிவிக்கிறதாதான் நான் கருதுறேன்.

சுகமோ, துக்கமோ பிடிச்சவங்க பக்கத்துல இருக்கணும். மனசுக்குப் பிடிச்சவங்க இல்லாத சொர்க்கமும் நரகம்தான். மனசுக்குப் பிடிச்சவங்க கூட இருந்தா நரகமும் நமக்குச் சொர்க்கம்தான். எல்லா புது வருசத்தையும் விட நான் சென்னையில வேலை தேடிக்கிட்டு இருந்த  1998ம் வருசம் பொறந்த அந்த வருசத்தை மறக்கவே முடியாது. யாருமே இல்லாம தனியா மொட்டை மாடியில பசியோட படுத்துக்கிட்டு நட்சத்திரங்களைப் வெறிச்சு பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னை சுத்தி சென்னை அல்லோலகல்லோலப்பட்டுக்கிட்டு இருந்தப்ப, நியூ இயரைக் கொண்டாட கூப்பிட்ட சில உறவுகளையும் நட்புக்களையும் நான் தவிர்த்துட்டு தனியா கிடந்த அந்த அடர்த்தியான புதுவருசம் எனக்கு வேறு மாதிரியான அனுபவத்தைக் கொடுத்துச்சு.

எல்லாம் இருந்தா எல்லாம் நாளுமே பண்டிகைதான் பாஸ். எதுவுமே இல்லைனா பண்டிகை நாளு கூட நமக்குச் சூன்யம்தான். இந்த வாழ்க்கை பொருளால் ஆனது மட்டும் கிடையாதுன்னு என் தத்துவ அறிவு சொன்னாலும் பொருள் இல்லேன்னா இங்கே குண்டூசியைக் கூட நம்மலால நகர்த்த முடியாதுன்னு ஆன்மீகத்தேடல்ல கிடைச்ச  சத்தியம் எனக்கு செவுட்டில அறைஞ்சு சொல்லிக் கொடுத்துச்சு. 1998 அந்த ஜனவரி ஒண்ணு 00:01க்கு பொறந்தப்ப ஒரே சத்தமா இருந்துச்சு... ஹாப்பி நியூ இயர்னு காது கிழியற மாதிரி இந்த உலகம் போட்ட சத்ததுல என்னை மறந்து தூங்கிட்டு இருந்த நான்.... தி.நகர், ரெங்கநாதன் தெருவோட கொண்டாட்டத்தை மொட்டை மாடியில இருந்து இருட்டுக்குள்ள என்னைப் பதுக்கிக்கிட்டு மெல்ல எட்டிப் பார்த்தேன்.

அப்போ எனக்குன்னு ஒரு அடையாளமும் கிடையாது. என்கிட்ட இருந்த ஒரே ஒரு அடையாளம் ஒரு கிராமப்புற கல்லூரியில கடைசி செமஸ்டர்ல பதினேழு அரியர்ஸ் எழுதி செகண்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணின பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரின்ற ஒரே ஒரு அடையாளம்தான். அது மட்டும்தான் நான் எனக்குன்னு சேத்து வச்ச சொத்து . அந்த டிகிரியும் கூட ஏன் படிச்சோம் எதுக்குப் படிச்சோம்னு தெரியாம படிச்சுட்டு வந்து சென்னையில கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் காலேஜ்ல ஜாயின் பண்ணி ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சு முடிச்சா இந்த வாழ்க்கைய ஜெயிச்சுடலாம்னு யாரோ ஒருத்தன் சொன்னதைக் கேட்டு பிஜிடிசிஏ படிச்சு முடிச்சுட்டு சென்னையை நான் உத்துப் பாத்தப்ப....

சென்னை என்னை கண்டுக்கவே இல்லை. 

ஒடுற வருசம் யாரையும் தனியா எங்கையும் நிறுத்தி வச்சுட்டு ஓடுறது  கிடையாது. அது எல்லோ மனுசங்களையும் சேத்து சுனாமி அலை இழுத்துட்டு ஓடுற மாதிரி பிடிக்குதோ பிடிக்கலையோ தரதரன்னு இழுத்துக்கிட்டுதான் போகுது. ஏதேதோ சூழல்கள், ஏதேதோ வெற்றிகள், அவாமானங்கள், பாராட்டுக்கள்....னு எல்லா விதமான உணர்வுகளுக்குள்ளயும் நம்மள போட்டு முக்கி எடுத்து அதை அனுபவமாக்கி நம்மை மரணத்துக்கு தயார்படுத்துறதுதான் காலத்துக்கு இந்த இயற்கை கொடுத்திருக்க ஒரு மிகப்பெரிய வேலை.

நல்லா விளங்கிக்கிட்டு நின்னு நிதானிச்சுப் பார்த்தா இதைத்தான் யுகங்களா மனிதர்களுக்கு காலம் மிகப்பெரிய பதிலா சொல்லிக்கிட்டே இருக்கறத நாம் உணர முடியும். 1998க்கு அப்புறம் ஒவ்வொரு புதுவருடமும் ஒவ்வொரு விதமா என்னை வந்து உரசிப்பார்க்க...அதே சென்னையில நானும் புதுவருசத்தைக் கொண்டாட என்ன என்ன வழிமுறைகள் இருக்கோ அப்டி அப்டி கொண்டாட ஆரம்பிச்சேன். பெரும்பாலும் புதுவருசக் கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறது ஏதோ ஒரு ஒப்பனர்தான். அந்த ஓப்பனர் யாரோ ஒரு நம்ம மனசுக்குப் பிடிச்ச உறவா சில பேருக்கு இருப்பாங்க, பலபேருக்கு வெறுமனே பாட்டில திறக்குற சாதரண ஓப்பனாராவும் அது இருக்கு. பொங்கி வழியும் மதுக்கோப்பைகள்லயும், வயிறு புடைக்கத் தின்று தீர்க்கும் உணவுப் பதார்த்தங்களயும், திருத்தமான அதிக விலை கொடுத்து வாங்கி போட்டுக்கிட்ட உடைகளிலும், அழகா செஞ்சுக்கிற ஒப்பனைகள்லயும் என்னோட புது வருசங்கள் கரைபுரண்டு ஓடிக்கிட்டு இருந்தப்பதான்...

ஒரு புதுவருசம் அன்னிக்கு ப்ளாட்பாரம் ஓரமா போத்திக்க போர்வை கூட இல்லாம தன் அம்மோவ நெஞ்சுக்குள்ள வெற்று உடம்போட ஒண்டிக்கிட்டு கிடந்த ஒரு ஏழைப் பிஞ்சு மேலவும் விழுந்துச்சு. மெரீனா பீச்ல வழக்கப்படி குமிஞ்சுக் கிடந்த நண்பர்கள் கூட்டத்துக்கு நடுவுல புதுவருசத்தைக் கொண்டாடித் தீர்க்க போய்கிட்டு இருந்த எனக்கு இந்த புதுவருட சந்தோசம் எல்லோருக்கும் கிடையாதுன்ற உண்மை உறைச்சப்ப யாருமே இல்லாம நான் தனியா நின்னுக்கிட்டு இருந்த அந்த புதுவருசம் என் புத்தியில ஏறி உட்கார்ந்துகிட்டு நர்த்தனம் ஆட ஆரம்பிச்சுது.

அதுக்காக அந்த பச்சைப்புள்ளைய பாத்துட்டு நான் ஒண்ணும் ஒடுங்கி உட்காந்து தத்துவத்துக்குள்ள போய் நின்னு வாழ்க்கையோட தீர்வ தேட ஆரம்பிக்கல..அது எல்லாம் புத்தர்களுக்கான வழிமுறைகள். என்ன மாதிரி சாதரண மனுசங்க... தோ வந்துட்டேன்டா மச்சான்னு சொல்லிட்டு அடுத்த செகண்ட் ஆக்ஸிலேட்டரைத் திருகி நியூ இயர் கொண்ட்டாட்டத்துக்குள்ள என்னை கரைச்சுக்கிட்டுத்தான் ஆகணும். ஒவ்வொரு புதுவருசம் பொறக்கும் போதும் எனக்குள்ள தப்பாம இந்த ரெண்டு காட்சிகளும் வராம இருந்தது கிடையாது. இதோ  மீண்டும் ஒரு வருடத்திற்காக உலகம் கொண்டாட்டத்தை தொடங்கிருச்சு, இந்த மிகப்பிரம்மாண்டமான வாழ்க்கையோட ஒரு சிறு துகளா நாமளும் அதை வேடிக்கைப் பார்க்க தொடங்கிட்டோம்...

இந்த வருடமும் பூக்கள் பூக்கும், மரங்கள் வீழும், மனிதர்கள்  பிறப்பார்கள் மரிப்பார்கள், சந்த்தோசமும் துக்கமும் சரியாய் பிசையப்பட்டு நமக்கு பரிமாறப்படப் போகிறது. வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ சொல்ல முடியாது. கொடுப்பதை வாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும்.

வாழ்க்கையோட புரிதலே....பட்டும் படாம சாட்சி மனோபாவத்தோட வாழ்ந்துட்டுப் போறதுதான் பாஸ். சரி தவறு இது ரெண்டுக்கும் நடுவுல மூணாவதா ஒரு பதில் எப்பவுமே இருக்கத்தான் செய்யுது பாஸ்..., அதே மனோபாவத்தோட கடந்து போன வருசங்களடோ வரப்போகுற வருசத்தையும் நாமாதானே சேர்த்து வைக்கனும்.

காலம் ஒரு போதும் தொடங்கவும் இல்லை..... எங்கேயும் முடியவும் இல்லை....!

என்னை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும்....


இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...!




தேவா சுப்பையா...










Comments

Anonymous said…
பெரிய பேக்கிரவுண்டோட நாம பிறக்கவில்லை! மிகவும் சாதாரண, எளிய குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவருக்குமே தங்களோட வாழ்க்கையில், நீங்க குறிப்பிட்ட அனுபவங்களை அனுபவிச்சிதான் இருப்பாங்க! என்னோட அனுபவமும் நீங்க குறிப்பிட்ட சம்பவங்களோட ஒத்துபோகுது! காலம்,,,ஒரு இயற்கை நியதியை நமக்கு உணர்த்திக் கொண்டே தான் இருக்கின்றது! மிகவும் கவர்ந்த பதிவாக பதிந்தமைக்கு நன்றி சகோ!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல