எழுதாத கவிதையொன்றை அனுப்பி வைக்கிறேன்...
புரியாத விசயமொன்றை அதில் பூட்டி வைக்கிறேன்...
அதி ரகசியத்தைச் சுமந்து வரப்போகும் அந்த கவிதையினில்...
எது இல்லாததோ அது சிம்மமாய் கர்ஜிக்கும்,
எதை எல்லோரும் தேடுகிறார்களோ
அது ஒங்கே ஒளிந்து கொண்டிருக்கும்...
பேசியதை பேசி,எழுதியதை எழுதி வாசித்ததை வாசித்து
சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின்
தன்முனைப்பு முனையினை ஒடித்தெறிவது மட்டுமே
அந்த கவிதையின் கருபொருளாயிருக்கும்
தட்டிலிட்ட பிச்சையை என்னுடையது என்று சொல்லும்
பிச்சைகாரனைப் போன்றல்லவா
இதை என் வாழ்க்கை என்று
எல்லோரும் மார்த்தட்டிக் கொண்டிருக்கிறீர்கள்...?!
அந்த கவிதையை வாசித்து முடிக்கும் முன்பே
உங்கள் சவப்பெட்டிகளின் மீது அறைந்து மோதும்
சுத்தியின் சப்தத்தை நீங்கள் கேட்கப் போகிறீர்கள்...
ப்ரியத்தை ஒருவேளை அந்தக் கவிதை
உங்களிடம் பகிரலாம்...
அது உங்களுக்குள் நிரம்பிக் கிடக்கும்
பேரன்பின் உயரத்தைப் பொறுத்தது...
காதலையும் காமத்தையும் அந்தக் கவிதைகளில்
நீங்கள் கண்டடையக் கூடும்..
அது உங்களின் திருப்தியின்மையைப் பொறுத்த்து
கடலின் உயரத்தையும்
காற்றின் தடிமனையும்
வானின் உயரத்தையும்
எப்போதுமே பிடிபடாத இந்த பிரபஞ்சத்தின்
அதி ரகசிய பக்கங்களையும்,
மரித்து போன மனிதர்களின் செல்லரித்துப் போன
ஆசைகளையும், இன்னபிற உள்ளன இல்லாதன பற்றியும்
ஒரு வேளை அந்தக் கவிதை பேசவும் கூடும்...
நீங்கள் வாசித்து அதை புரிந்து கொள்ளப் போவதென்று
அதிலொன்றுமே இருக்கப்போவதில்லை....
என்றாலும் கூட....
நீங்கள் அந்தக் கவிதையை வாசித்து முடித்த பின்பு...
வாசிப்பவனென்றும், கவிதையென்றும்...
கவிதை எழுதியவனென்றும் யாருமேயில்லாமல் போக...
மிச்சமிருக்கும் அந்த சொச்சத்தில்
விளையாடிக் கொண்டிக்கும் விளங்காப் பொருளாய்
நீங்கள் ஆகப் போகிறீர்களென்பது மட்டும் நிச்சயம்...!
தேவா சுப்பையா...
Comments
அழகாய்...
அருமையாய்...