Skip to main content

மெலுகா - சிவா த வாரியர் 0.1


காட்டெருமைகளின் எலும்பில் பக்குவமான சிறு குழல்களை எடுத்துதான் இந்த புகைக்கும் குழல்களை உருவாக்குகிறார்கள். புகையிலை நிரப்பப்பட்ட குழலை எடுத்து மெல்ல உறிஞ்சினேன். ஆழமாக நுரையீரலைத் தொட்டுப் பரவி இரத்த் திசுக்களில் பரவிய அந்த சிறு போதை மூளைக்குள் சென்று மனதை மெல்ல மெல்ல அடக்கியது. இதமான காற்றில்  நடனமாடிக் கொண்டிருந்த மானசோரவர் ஏரியை பார்த்துக் கொண்டிருந்தேன். கவலைகள் ஏதுமின்றி பிராயத்தில் நடக்க ஆரம்பித்திருந்த சிறு பிள்ளை நீரைக் கண்டவுடன் கால் பதித்து ஆடும் நர்த்தனத்தைப் போல அது மிதந்து ஆடிக் கொண்டிருந்தது. இன்னதுதானென்று தெரியாத ஒரு சோர்வும் கவலையும் என்னை ஆட்கொள்ளும் போதெல்லாம் இப்போது நினைவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறேனே என் பால்யப் பிராயம் அதைத்தான் மீட்டெடுத்துக் கொண்டு வந்து மீண்டும் உற்சாகத்தை எனக்குள் உயிர்ப்பித்துக் கொள்வேன்....

மாலைச் சூரியன் வேறொரு திசையில் உந்தி எழுவதற்காக மெல்ல மெல்ல என் தேசத்தின் பனிப்பிரதேசத்து மலைகளுக்குள் விழுந்து கொண்டிருந்தான். செஞ்சிவப்பான வானம் மானசோரவரில் விழுந்து கிடந்ததைப் பார்த்த பொழுது யாரோ தாம்பூலத்தை மென்று துப்பியிருந்தது போலவே எனக்குத் தோன்றியது. மஞ்சள் சூரியன் தூரத்தில்  நிதர்சனமின்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றி உனக்கென்ன தெரியும் என்பது போல என்னை பார்த்து புன்னகைத்தபடியே மெல்ல மெல்ல விடைபெற்றுக் கொண்டிருந்தான்.

பால்யம்தான் எவ்வளவு அழகானது? சிறு பிள்ளையாய் இருந்த போது இந்த மானசரோவர் கரையில் கற்களை விட்டெறிந்து யார் எறிந்த கல்லினால் அதிக அலைகள் உருவாகின்றன என்றெல்லாம் விளையாடிச் சிரித்திருக்கிறோம். என் உடம்பு முழுதும் போரில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இருந்தன. அந்தத் தழும்புகளை சூரியனின் செங்கதிர்கள் தொட்டு தடவ, மெலிதாய் வீசிய தென்றல் காற்று என்னையும் அந்த பிராந்தியம் முழுதையும் குளிர வைத்துக் கொண்டிருந்தது.

நான் ஷிவா...என்னை ருத்ரன் என்றும் என் மக்கள் அழைப்பதுண்டு. என் மக்களை இந்த காட்டுமிராண்டித்தனமான பாக்கிரதி கூட்டத்திடம் இருந்து காப்பதற்கே என் நேரம் எல்லாம் சரியாய்ப் போய் விடுகிறது, பிறகெப்படி இந்த வாழ்க்கையின் ஆழத்திற்குள் நான் சென்று விடை தெரியாத கேள்விகளுக்கு பதிலைப் பெறுவது...?

சற்று தூரத்தில் இருந்த எம் கூடாரத்தின் நுழை வாயிலில் பத்ரா பாதுகாவலனாய் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த இரண்டு காவலர்கள் ஏதோ கனவில் உறங்கிக் கொண்டிருக்க நான் பத்ராவை  பார்த்து புருவம் உயர்த்தினேன். பத்ரா என் முகமாற்றத்தைப் புரிந்தவனாய் அவனுக்கு பின்னால் திரும்பிப்பார்த்து உறங்கிக் கொண்டிருந்த காவலர்களை எட்டி உதைத்து அவர்களை கவனமாயிருக்க சொன்னான்.

நான் மீண்டும் மானசரோவர் ஏரியை நோக்கி முகம் திருப்பிக் கொண்டேன்.

இந்தக் ஏரிக்கரையில்தான்  என் வாழ்க்கை துவங்கியது. யாதென்றும் இன்னதென்றும், விளங்கிக் கொள்ள முடியாத புதிரோடு நகரும் இந்த வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் கேள்விகள் என்னுள் எழுந்ததும் இந்த ஏரியின் கரையில்தான். புற்றீசல்கள் போல மனிதர்கள் பிறப்பதும் பின் மறைவதுமென தொடர்ச்சியாய் நிகழ்ந்து கொண்டிருக்க அசையாமல் நிற்கும் இந்த காலத்தை எப்படி நான் வெல்வது...? உண்ணவும், உடுக்கவும், இனப்பெருக்கம் செய்யவும் என்று மனிதர்கள் எல்லோரும் ஏதேதோ ஒரு அவசரத்தில் ஓடிக் கொண்டிருக்க எனக்கும் இந்த காலத்திற்கும் இருக்கும் தொடர்பின் முதல் முடிச்சை எப்போது தொட்டவிழ்ப்பது நான். இடைவிடாத போர்கள், போர்கள், உயிர்காத்துக் கொள்ள உயிர்களை கொல்ல திட்டங்கள் என்று எங்கே சென்று கொண்டிருக்கிறது என் வாழ்க்கை...?

யோசித்தபடியே எனது இடது பக்கம் திரும்பினேன்.  அங்கிருக்கும் கூடாரத்தில்தான் அன்னிய தேசத்தவர் இருவரயும்  தங்க வைத்திருக்கிறேன். இருபது காவலர்கள் அந்த கூடாரத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். பாகிரிதிகளாலும் இன்ன பிற மலைவாழ் இனக்குழுக்களாலும் எப்போதும் உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் ஏன் இந்த மலைகளுக்கு அப்பால் பெருஞ்சமவளிப் பகுதியிலிருக்கும் மெலுகாவிற்கு வரக்கூடாது என்று அவர்கள் என்னிடம் கேட்டதில் ஒரு நியாயம் இருப்பதாய்த்தான் எனக்கு தோன்றுகிறது...

மீண்டும் ஆழமாய் புகைத்தபடியே.....யோசிக்க ஆரம்பித்தேன்...


...will continue....



தேவா சுப்பையா...






Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த